6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 13 July 2018 11:30 PM GMT (Updated: 13 July 2018 11:53 PM GMT)

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11¾ லட்சம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி (டேப்லட்) வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

கோபி சட்டசபை தொகுதிக்கு உள்பட்ட வெள்ளாளபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, முருகன்புதூர் நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, கலிங்கியம் அரசு உயர்நிலைப்பள்ளி, கரட்டடிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடந்தது.

வெள்ளாளபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு ஸ்மார்ட் வகுப்பை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது கூறியதாவது:-


9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்பட்டு இணையதளம் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு கல்வி கற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 200 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 12-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் ‘திறன் வளர்ப்பு பயிற்சி’ தொடர்பான புதிய பாடத்தை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி (டேப்லட்) விரைவில் வழங்கப்பட உள்ளது.


அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.

அதுமட்டுமின்றி அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஓட்டல் மேலாண்மை, ஆஸ்பத்திரி மேலாண்மை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் உடனடியாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பள்ளிக்கூடங்களில் சரிவர செயல்படாத பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மாற்றியமைக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதியவர்களுக்கு விரைவில் பணி வழங்கப்படும். ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப்பதிவு அடுத்த மாதம் தொடங்கப்படும்.


தனியார் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ- மாணவிகளை ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் அரசு பள்ளிகளில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கிராமப்புற மாணவர்கள் சிறப்பாக படிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதிலும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆசிரியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கல்வித்துறையில் பல்வேறு பிரிவுகளில் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Next Story