தமிழகத்துக்கு காவிரியில் நாளை முதல் கூடுதல் தண்ணீர் வினாடிக்கு 83 ஆயிரம் கனஅடி வீதம் திறக்க வாய்ப்பு


தமிழகத்துக்கு காவிரியில் நாளை முதல் கூடுதல் தண்ணீர் வினாடிக்கு 83 ஆயிரம் கனஅடி வீதம் திறக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 14 July 2018 12:21 AM GMT (Updated: 14 July 2018 12:21 AM GMT)

கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணையை போன்று லிங்கனமக்கி, சுபா, வரகி, ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

மண்டியா,

கே.ஆர்.எஸ். அணை நிரம்ப இன்னும் 3 அடிதான் பாக்கி உள்ளது என்றும், தமிழகத்திற்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் காவிரியில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்றும், வினாடிக்கு 83 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நீர்ப்பாசனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

கர்நாடகத்தில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதுவரை பெய்த மழைக்கே கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஸ்தம்பித்துவிட்டன. ஆனால் இன்னும் மழை ஓய்ந்தபாடில்லை. தொடர்ந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர் கனமழையின் காரணமாக கர்நாடகத்தில் ஓடும் காவிரி, கபிலா, துங்கா, பத்ரா, ஹேமாவதி உள்பட அனைத்து ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் குறிப்பாக காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே அமைந்துள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்) அணை தனது முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது.

கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர்மட்டம் 124.80 அடி ஆகும். நேற்றைய நிலவரப்படி அணை 121.40 அடியை எட்டி இருந்தது. அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 767 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணை நிரம்ப இன்னும் 3.40 அடி தான் பாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மற்றொரு முக்கிய அணையான கபினி அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது. அந்த அணையின் மொத்த நீர்மட்டம் 2,284.00 அடி(கடல் மட்டத்தில் இருந்து) ஆகும். நேற்றைய நிலவரப்படி கபினி அணை 2,282.82 அடியை எட்டி இருந்தது. அணைக்கு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் நேரடியாக தமிழகத்தை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நேற்று இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 63 ஆயிரத்து 767 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கே.ஆர்.எஸ். அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் நாளை முதல் தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 83 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நீர்ப்பாசனத்துறை அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. அணை நிரம்ப இன்னும் 3.40 அடிதான் பாக்கி உள்ளது. நாளைக்குள் (அதாவது இன்று) அணை நிரம்ப வாய்ப்பு இருக்கிறது. அணையில் 123 அடி தண்ணீர்தான் சேமித்து வைக்க முடியும். அதற்குமேல் நீரை சேமிக்க இயலாது. அதற்குமேல் நீர்வரத்து இருந்தால் அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் அப்படியே மதகுகள் வழியாக திறந்துவிடப்படும். தற்போது உள்ள நீர்வரத்து அப்படியே தொடர்ந்தால் 15-ந் தேதி(அதாவது நாளை) முதல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும்.

அப்படி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 83 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும். ஜூன் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு 134 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் கடந்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி முதல் இதுவரை தமிழகத்திற்கு 35 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் நிலையில் உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Next Story