கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 July 2018 11:30 PM GMT (Updated: 16 July 2018 7:04 PM GMT)

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி தண்ணீர் செல்கிறது.

மண்டியா,

கர்நாடகத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கர்நாடக கடலோர மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மழை தீவிரம் அடைந்தது.

இதேப்போல காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் உள்ள தலைக்காவிரி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்து உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்) அணையில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அதுபோல் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு கடந்த ஒரு வாரமாக 20 ஆயிரம், 30 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்தது. அணைகளுக்கு அதிகளவு நீர் வருவதால் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து நேற்று முன்தினம் 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலையும் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை 123.43 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதுபோல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 2,284 அடி கொள்ளளவு கொண்ட (கடல் மட்டத்தில் இருந்து) கபினி அணையின் நீர்மட்டம் 2,281.66 அடியை எட்டியது. அணைக்கு 36,137 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 33,300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கபிலா ஆற்றில் காட்டாற்று வெள்ளம் இருகரையை தொட்டபடி ஆர்ப்பரித்து செல்கிறது. கபிலா ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீர், டி.நரசிப்புரா தாலுகா தலக்காடு பகுதியில் காவிரியில் சங்கமிக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் அதிகளவில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அந்தப் பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று மாலை 4 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 63 ஆயிரத்து 488 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து 80,277 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதுபோல் கபினி அணையின் நீர்வரத்து 34 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அதேவேளையில் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இரு அணைகளில் இருந்தும் 1 லட்சத்து 15 ஆயிரத்து 277 கனஅடி நீர் காவிரியில் தமிழகத்திற்கு செல்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் காவிரி ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு செல்லவும், கே.ஆர்.எஸ். அணை அருகே உள்ள பிருந்தாவன் கார்டனுக்கு செல்லவும் நேற்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

காவிரி ஆற்றின் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மண்டியா மாவட்டம் மலவள்ளி அருகே உள்ள ககனசுக்கி, கொள்ளேகால் தாலுகாவில் உள்ள பரசுக்கி ஆகிய நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை தூரத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் ரசித்து பார்வையிட்டு வருகிறார்கள். நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சிவனசமுத்திரத்தில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது.

Next Story