சத்துணவு திட்டத்திற்கு பண்ணையாளர்களே முட்டை சப்ளை செய்யும் முறையை கொண்டுவர வேண்டும் கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் பேட்டி


சத்துணவு திட்டத்திற்கு பண்ணையாளர்களே முட்டை சப்ளை செய்யும் முறையை கொண்டுவர வேண்டும் கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 16 July 2018 11:45 PM GMT (Updated: 16 July 2018 7:26 PM GMT)

சத்துணவு திட்டத்திற்கு பண்ணையாளர்களே முட்டை சப்ளை செய்யும் முறையை கொண்டுவர வேண்டும் என்று கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் கூறினார்.

நாமக்கல்,

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வரை சத்துணவு முட்டை சப்ளைக்கு மாவட்ட அளவில் மாதந்தோறும் டெண்டர் கோரப்பட்டு, பண்ணையாளர்கள் அந்த டெண்டரில் கலந்துகொண்டு டெண்டர் பெற்று, நேரடியாக வினியோகம் செய்து வந்தனர். ஆனால் அதற்கு பிறகு அந்த முறை மாற்றப்பட்டு, தமிழகத்தில் கிறிஸ்டி என்ற தனியார் நிறுவனத்திற்கு மட்டுமே சத்துணவு முட்டை டெண்டர் தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்நிறுவனம் சத்துணவு முட்டைகளை பண்ணையாளர்களிடம் இருந்து 1 ரூபாய் 75 காசுகள் முதல் ரூ.2 வரை கொடுத்து வாங்கி, அரசுக்கு ரூ.4 ரூபாய் 34 காசுகளுக்கு வழங்குகிறது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.75 கோடி இழப்பு ஏற்படுகிறது. பண்ணையாளர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.150 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

தனியார் நிறுவனத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ள டெண்டர் காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி சென்னையில் இந்த புதிய டெண்டர் சம்பந்தமான கூட்டம் நடைபெற்றது. குறிப்பிட்ட தனியார் நிறுவனம் சார்ந்த நிறுவனங்களில் இருந்து 3 டெண்டர்களும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் 2 டெண்டர்களும், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு டெண்டரும் போடப்பட்டு இருந்தது. அதிகாரிகள் எவ்வித காரணமும் கூறாமல் டெண்டரை ரத்து செய்துவிட்டனர். இதனால் வருகிற ஆகஸ்டு மாதம் முதல் ஏற்கனவே டெண்டர் எடுத்துள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கான டெண்டரை நீட்டிப்பு செய்ய முடிவு செய்து உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். தமிழக அரசு அப்படி கொடுத்தால், பண்ணையாளர்கள் யாரும் அந்த நிறுவனத்திற்கு முட்டை சப்ளை செய்ய கூடாது என வலியுறுத்துவோம்.

தமிழக அரசு தற்போது உள்ள டெண்டர் முறையை ரத்து செய்து விட்டு, உடனடியாக ஏற்கனவே இருந்தது போல் மாவட்டம் வாரியாக டெண்டரை அறிவித்து, பண்ணையாளர்களே நேரடியாக சத்துணவு திட்டத்திற்கு முட்டை சப்ளை செய்யும் முறையை கொண்டுவர வேண்டும்.

இது தொடர்பாக நாங்கள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருக்கிறோம். அதன் பிறகும் எங்கள் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story