வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 16 July 2018 10:45 PM GMT (Updated: 16 July 2018 8:05 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்து உள்ளார்.

திருவள்ளூர்,

இது தொடர்பாக அவர், வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது. படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான, வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி படித்து விட்டு வேலை வாய்ப்பு வேண்டி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடம் மற்றும் அதற்கு மேலும் காத்திருக்கும் இளைஞர்களுக்கு 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத பதிவுதாரர்களுக்கு மாதம் ரூ.200-ம், தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.300-ம், 12-ம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்படிப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.400-ம், பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.600-ம் மாதம் தோறும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

மேற்கூறிய உதவித்தொகை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து பதிவினை புதுப்பித்து 5 வருடங்கள் காத்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 40-ம், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு வயது 45-க்குள்ளும் இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்தில் தினசரி சென்று பயில்பவராக இருக்கக் கூடாது.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கூறியவாறு தகுதியும், உதவித்தொகை பெற விருப்பமும் உள்ளவர்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களை காண்பித்து விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம்.

அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற 31-ந் தேதிக்குள் உரிய சான்றிதழ்களுடன் வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவித்தொகை திட்டத்தின்படி எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி மற்றும் அதற்கு குறைவான கல்வித்தகுதி உடையவர்களுக்கு மாதம் ரூ.600-ம், 12-ம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்படிப்பில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொருத்த வரையில் உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story