வரதட்சணை கொடுமையால் விஷத்தை தின்று பெண் தற்கொலை கணவர் கைது


வரதட்சணை கொடுமையால் விஷத்தை தின்று பெண் தற்கொலை கணவர் கைது
x
தினத்தந்தி 16 July 2018 10:15 PM GMT (Updated: 16 July 2018 9:44 PM GMT)

வலங்கைமான் அருகே வரதட்சணை கொடுமையால் விஷத்தை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கோவிந்தகுடி தெற்கு தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகள் புவனேஸ்வரி (வயது32). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளையராஜா(42) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இளையராஜா, மனைவி புவனேஸ்வரியிடம் உனது பெற்றோர் வீட்டில் இருந்து நகை, பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சணையாக வாங்கி வரும்படி கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வரதட்சணை தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இளையராஜா, புவனேஸ்வரியை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி விஷத்தை தின்று மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குசிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story