கீழையூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வடிகால்களையும் தூர்வார வேண்டும்


கீழையூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வடிகால்களையும் தூர்வார வேண்டும்
x
தினத்தந்தி 16 July 2018 10:45 PM GMT (Updated: 16 July 2018 9:55 PM GMT)

கீழையூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வடிகால்களையும் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய தலைவர் பஷீர்அகமது தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் விவசாயிகள் சங்க புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றிய தலைவராக செல்லையன், ஒன்றிய செயலாளராக சீனிவாசன், பொருளாளராக பஷீர்அகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் குடிமராமத்து பணிக்காக ரூ.116 கோடி ஒதுக்கப்பட்டது. எனவே குடிமராமத்து பணிகள் நடைபெறும் ஊராட்சி தோறும் விவசாயிகளை கொண்டு குழு அமைத்து விவசாய தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் பணியினை செய்ய வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி நீரை பயன்படுத்தி தான் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டும் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. தற்போது கனமழையின் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ஒருபோக சாகுபடி செய்திட முழு மானியத்தில் விதைநெல் மற்றும் நிபந்தனையின்றி விவசாய கடன் வழங்க வேண்டும்.

கீழையூர் ஒன்றியத்திற்கு வெண்ணாறு பிரிவின்கீழ், வெள்ளையாறு, அரிச்சந்திரா ஆறு மற்றும் கிளை வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் வெள்ளத்தால் கீழையூர் ஒன்றிய பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கி விவசாயம் அழிந்துவிடுகிறது. எனவே பருவமழையை கருத்தில் கொண்டு கீழையூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வடிகால்களையும் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் சோமு.இளங்கோ, நாகராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணையன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலாஜி, பரமசிவம், தவமணி, கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் சேகர் நன்றி கூறினார்.

Next Story