குழந்தைகளை அடித்ததை கணவர் கண்டித்ததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


குழந்தைகளை அடித்ததை கணவர் கண்டித்ததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 16 July 2018 10:25 PM GMT (Updated: 16 July 2018 10:25 PM GMT)

பெற்ற குழந்தைகளை அடிப்பதை கணவர் தட்டிக்கேட்டதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து செய்து கொண்டார்.

குன்னத்தூர்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குன்னத்தூர் அருகே நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் சரவணக்குமார்(வயது 35). விவசாயி. இவருடைய மனைவி மகேஸ்வரி (24). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் இந்த தம்பதியினர் மனக்கவலையில் இருந்தனர். நேற்று முன்தினம் குழந்தைகள் சாப்பிடாமல் அடம் பிடித்து உள்ளனர். இதனால், அவர்களை மகேஸ்வரி அடித்து, திட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த சரவணக்குமார், குழந்தைகளை ஏன் அடித்து மிரட்டுகிறாய்? அன்பாக சாப்பாடு ஊட்டி விடு என்று தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மகேஸ்வரி மனமுடைந்தார்.

பின்னர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச்சென்ற மகேஸ்வரி, இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சரவணக்குமார் தனது மனைவியை அக்கம், பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். அப்போது, ஆடு மேய்க்க போன இடத்தில் மகேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், குழந்தைகளை அடித்ததை கணவர் கண்டித்ததால், அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story