அரிவாளால் வெட்டப்பட்ட டெய்லர் சிகிச்சை பலனின்றி சாவு


அரிவாளால் வெட்டப்பட்ட டெய்லர் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 17 July 2018 10:08 PM GMT (Updated: 17 July 2018 10:08 PM GMT)

திருப்பத்தூர் அருகே அரிவாளால் வெட்டப்பட்ட டெய்லர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜோலார்பேட்டை, 

திருப்பத்தூரை அடுத்த பாச்சல் ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுதீஷ் (வயது 25), டெய்லர். இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ராஜீவ்காந்தி மைதானம் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் திடீரென சுதீசை சரமாரியாக கத்தி, அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 10.7.2017-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த தனியார் டி.வி. நிருபர் முனிராஜ் கொலை வழக்கில் சுதீஷ் முதல் குற்றவாளியாக கருதப்பட்டவர் என்றும், பழிக்கு பழியாக முனிராஜின் தம்பி கார்த்திக் (25), அதே பகுதியை சேர்ந்த சிவா (29), தங்கபாலு, ஜொல்லு என்கிற நந்தகுமார், சிலம்பரசன் ஆகிய 5 பேர் சேர்ந்து சுதீசை வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடியது தெரியவந்தது.

திருப்பத்தூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு யேசுராஜ் உத்தரவின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில், போலீசார் தப்பி ஓடிய கார்த்திக், சிவா ஆகிய 2 பேரையும் பிடித்து கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள தங்கபாலு, நந்தகுமார், சிலம்பரசன் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story