மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 268 பேருக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்


மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 268 பேருக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 18 July 2018 11:00 PM GMT (Updated: 18 July 2018 7:07 PM GMT)

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 268 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

விருதுநகர்,

விருதுநகர் அருகேயுள்ள சங்கரலிங்காபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. மேலும் 268 பேருக்கு ரூ.36 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

பொது சுகாதாரத்துறையின் மூலமாக அமைக்கப்பட்டிருந்த நடமாடும் மருத்துவ முகாமில் பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர். கிராம சுயாட்சி இயக்க திட்டங்களில் சேர்வதற்கான விழிப்புணர்வு பணியும் நடைபெற்றது.

முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

அரசின் அனைத்து திட்டங்களும் பொதுமக்களிடம் முழுமையாக சென்றடைய வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் திட்டங்களை பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு நாம் தகுதியானவர்களாக இருக்கும் பட்சத்தில் மட்டும் உரிய அரசு அலுவலரிடம் விண்ணப்பித்து, பரிசீலனை செய்து எந்த ஒரு சிரமமின்றி பயன்பெற வேண்டும் என்பது தான் அரசின் முக்கிய நோக்கமாகும்.

பொதுமக்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் செய்வதை விட தங்களின் கிராமங்களிலோ அல்லது அருகிலுள்ள கிராமங்களிலோ உள்ள பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து எளிதாக பயன் பெறலாம். தகுதிவாய்ந்த பொதுமக்கள் சிரமமின்றி அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் ஊராட்சி அலுவலகங்கள் அல்லது அரசு கட்டிடங்களில் தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

Next Story