விராலிமலை அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 3 விவசாயிகள் பலி


விராலிமலை அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 3 விவசாயிகள் பலி
x
தினத்தந்தி 18 July 2018 11:00 PM GMT (Updated: 18 July 2018 7:48 PM GMT)

விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 3 விவசாயிகள் பரிதாபமாக இறந்தனர்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ராஜகிரி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 72). அதே பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி(50), வைத்தியநாதன்(60). இவர்கள் 3 பேரும் விவசாயிகள். இவர்கள் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்தவேலை நிமித்தமாக ராஜகிரியில் இருந்து விராலிமலைக்கு வந்தனர்.

பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். விராலிமலை காணியாளம்பட்டி பிரிவு சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடந்துள்ளனர். அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே வைத்தியநாதன், கோவிந்தன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். வெள்ளைச்சாமி படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து உடனடியாக விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிந்தன், வைத்தியநாதன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த வெள்ளைச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை வெள்ளைச்சாமியும் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் கார் டிரைவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஹரிகரன்(43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story