தொழில் அதிபரை கடத்தி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது


தொழில் அதிபரை கடத்தி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 July 2018 10:45 PM GMT (Updated: 18 July 2018 7:51 PM GMT)

மதுராந்தகம் அருகே தொழில் அதிபரை கடத்தி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுராந்தகம்,

மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் முத்துகுமார் (வயது 60). இவர் மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் பகுதியில் டைல்ஸ்கடை நடத்தி வருகிறார். கடந்த 30-ந்தேதி இரவு இவரை மர்மநபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகுமாரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மேல்மருவத்தூர் அருகே காட்டுப்பகுதியில் கடந்த 1-ந்தேதி கடத்தல்காரர்கள் முத்துகுமாரை இறக்கி விட்டுவிட்டு சென்றனர். ரூ.10 லட்சம் கொடுத்து தொழில் அதிபர் முத்துகுமாரை கடத்தல்காரர்களிடமிருந்து அவரது உறவினர்கள் மீட்டதாக கூறப்படுகின்றது.

ஆனாலும் கடத்தல்காரர்களை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். மேலும் முத்துக்குமாரிடம் கடத்தல்காரர்களை பற்றிய அடையாளங்களை போலீசார் கேட்டறிந்தனர். கடந்த 12-ந்தேதி கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை ரோந்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும் கடத்தல் கும்பலை சேர்ந்த சிலரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் அந்தோணிஸ்டாலின், மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கள்ளபிரான்புரம் என்ற இடத்தில் வேகமாக வந்த காரைமடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் வந்தவர்கள் தொழில் அதிபரை கடத்தி பணம் பறித்த கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

காரில் இருந்த சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த அனித்குமார் (31), தரமணியை சேர்ந்த ஏழுமலை(38), குன்றத்துரை சேர்ந்த ரவி( எ) நாகராஜ் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் பயன்படுத்திய காரில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இந்த கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான ஞானசேகரன், அவரது தம்பி சுரேஷ் மற்றும் முரளி ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கடந்த 12-ந்தேதி ஞானசேகரனின் தாயார், 2 மனைவிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story