ஒரே நாளில் மீனவர்கள் வலையில் 100 டன் கிளிச்சை மீன்கள் சிக்கின
கடலூர் துறைமுகத்துக்கு மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மீனவர்கள் வலையில் 100 டன் கிளிச்சை மீன்கள் சிக்கின.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, அக்கரைக்கோரி உள்பட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
அதன்படி கடந்த 3 நாட்களாக மீன்பிடிக்க செல்லும் இந்த மீனவர்களுக்கு வலையில் அதிக அளவு மீன்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக கிளிச்சை மீன்கள் அதிக அளவில் சிக்கி வருகிறது.
இது பற்றி மீனவர் ஒருவர் கூறுகையில், கடந்த 3 நாட்களாக மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. இன்று (அதாவது நேற்று) ஒரே நாளில் கடலூர் துறைமுகத்துக்கு கிளிச்சை மீன்கள் 100 டன் வரத்து இருந்தது. அதில் மீனவர்கள் கொண்டு வந்த ஒரு படகில் மட்டும் 2 டன் கிளிச்சை மீன்கள் இருந்தது.
இந்த வகை மீன்கள் பெரும்பாலும் கேரளாவில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்த மீன்களை கேரளா வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். 1 டன் ரூ.1 லட்சத்துக்கு ஏலம் போனது என்றார்.
இது தவிர கவளை, மத்தி, கொடுவா போன்ற மற்ற வகை மீன்களின் வரத்தும் அதிகளவில் இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் நேற்று கடலூர் துறைமுகம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
Related Tags :
Next Story