1 லட்சத்து 12 ஆயிரம் கனஅடி நீர்வரத்து: ஒகேனக்கல்லில் தொடரும் வெள்ளப்பெருக்கு


1 லட்சத்து 12 ஆயிரம் கனஅடி நீர்வரத்து: ஒகேனக்கல்லில் தொடரும் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 18 July 2018 11:00 PM GMT (Updated: 18 July 2018 10:08 PM GMT)

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருப்பதால் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. இதனால் கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பென்னாகரம்,

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1 லட்சத்து 17 ஆயிரத்து 642 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஐந்தருவி மெயின்அருவி, பெரியபாணி அருவி உள்ளிட்ட பகுதிகளில் அருவிகளை மூழ்கடித்தபடி புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று பிற்பகலில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர் வரத்தை கண்காணிக்கும் பணியை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் ஒகேனக்கல் அருவிகள் மற்றும் ஆற்றில் குளிக்க நேற்று 10–வது நாளாக தடை நீடித்தது. பரிசல்கள் இயக்க விதிக்கப்பட்ட தடையும் 10–வது நாளாக நீடித்தது. ஒகேனக்கல்லில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வனத்துறை சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரிகரையோரங்களில் போலீசார், தீயணைப்பு மீட்பு படையினர், ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story