ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு


ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 18 July 2018 11:30 PM GMT (Updated: 18 July 2018 10:32 PM GMT)

ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது, கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மும்பை, 

ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது, கால்கள் துண்டான வெளிநாட்டு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வெளிநாட்டு மாணவி

சூடான் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஜவாஹிர் அப்துல்லா (வயது24). இவர் சாங்கிலியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். விடுமுறையையொட்டி மும்பையில் இருந்து விமானத்தில் சூடான் செல்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் மீரஜ்ஜில் இருந்து கொய்னா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார்.

அந்த ரெயில் தாதர் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றபோது, ஜவாஹிர் அப்துல்லா தனது உடைமைகளை எடுத்து கொண்டு இறங்குவதற்குள் ரெயில் புறப்பட்டு சென்றது.

இதனால் பதற்றம் அடைந்த அவர் அவசர, அவசரமாக ஓடும் ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் துரதிருஷ்டவசமாக ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே விழுந்த அவரை ரெயில் இழுத்து சென்றதில் பலத்த காயம் அடைந்து தண்டவாளத்தில் விழுந்தார். இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கியதில் அவரது 2 கால்களும் துண்டானது.

சயான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்தநிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாணவி ஜவாஹிர் அப்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில், சூடான் தூதரகம் மாணவியின் உடலை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு உதவி செய்ய முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவிக்கு மும்பையிலேயே இறுதிச்சடங்கு செய்ய முடிவு செய்து உள்ளனர்.

Next Story