வேலைநிறுத்தம் இன்று தொடங்குவதால் தமிழகத்தில் இருந்து வடமாநிலம் செல்லும் 15 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்


வேலைநிறுத்தம் இன்று தொடங்குவதால் தமிழகத்தில் இருந்து வடமாநிலம் செல்லும் 15 ஆயிரம் லாரிகள் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 July 2018 11:00 PM GMT (Updated: 19 July 2018 6:42 PM GMT)

நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் இன்று முதல் தொடங்குவதால், தமிழகத்தில் இருந்து வடமாநிலம் செல்லும் 15 ஆயிரம் லாரிகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டு இருப்பதாக சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.

நாமக்கல்,

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிப்பது. ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டுவந்து, அவற்றின் விலையை குறைக்க வலியுறுத்துவது.

மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வெள்ளிக் கிழமை) முதல் நாடு முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, கோழிப்பண்ணையாளர்கள் சங்கங்கள் மற்றும் சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் என பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் கடந்த 15-ந் தேதி முதலே வடமாநிலங்களுக்கு சரக்கு முன்பதிவு செய்வதை நிறுத்திக்கொண்டது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது.

இதனால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, கட்டுமான பொருட்கள், தீப்பெட்டி, ஜவ்வரிசி, மோட்டார் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை தேக்கம் அடைய தொடங்கி உள்ளன. இதேபோல் வடமாநிலங்களில் இருந்து வரும் பருப்பு வகைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவையும் தடைபட்டுள்ளது.

இதற்கிடையே மத்திய அரசு நேற்று வரை அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து பேசவில்லை. எனவே அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் இன்று திட்டமிட்டப்படி லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் என அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

இதுவரை அரசு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவே திட்டமிட்டப்படி தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 32 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள், தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் முழுமையாக கலந்து கொள்கின்றன. எனவே தமிழகம் முழுவதும் இன்று முதல் 4½ லட்சம் சரக்கு வாகனங்கள் ஓடாது.

டீசல் விலை உயர்வு மற்றும் சுங்ககட்டண உயர்வு காரணமாக பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்களும் தங்களது சொந்த வாகனங்களை இயக்காமல் நிறுத்திவைத்து, வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கவேண்டும்.

வடமாநிலங்களுக்கு கடந்த 15-ந் தேதி முதல் சரக்கு முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டதால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் சுமார் 15 ஆயிரம் லாரிகள், 16-ந் தேதி முதலே நிறுத்தப்பட்டு விட்டன. நாளை (இன்று) முதல் அனைத்து பகுதிகளிலும் சரக்கு போக்குவரத்து அடியோடு முடங்கும். எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தத்தை கைவிட மாட்டோம். இதன் காரணமாக தமிழகத்தில் நாள்ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.250 கோடி இழப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நேற்று நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு உள்ள வடமாநிலம் செல்லும் லாரிகளில் வேலைநிறுத்தம் தொடர்பான நோட்டீசுகளை சங்க நிர்வாகிகள் ஒட்டினர். டிரைவர்களிடம் லாரிகளை இயக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

லாரிகள் வேலைநிறுத்தம் இன்று முதல் தொடங்கும் பட்சத்தில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.

Next Story