ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உற்சவர் சிலை மாற்றப்படவில்லை தலைமை அர்ச்சகர் பேட்டி


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உற்சவர் சிலை மாற்றப்படவில்லை தலைமை அர்ச்சகர் பேட்டி
x
தினத்தந்தி 19 July 2018 11:00 PM GMT (Updated: 19 July 2018 7:41 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உற்சவர் சிலை மாற்றப்படவில்லை என கோவில் தலைமை அர்ச்சகர் கூறினார்.

ஸ்ரீரங்கம்,

சிலை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலிலும் பல சிலைகள் காணாமல் போய்விட்டதாகவும், உற்சவர் சிலை மாற்றப்பட்டு விட்டதாகவும் இதுபற்றியும் ஐகோர்ட்டு விசாரணை நடத்த வேண்டும் என ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து ஸ்ரீரங்கம் வடக்குவாசல் ஜீயர் மடத்தில் ரெங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் முரளிபட்டர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் (நம்பெருமாள்) சிலை மிகவும் பழமையானது. அதை மாற்ற வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. இருப்பினும் பழமையான விக்கிரகத்தில் தேய்மானம் ஏதும் தென்பட்டால் அதை முறைப்படி சீர் செய்ய ஆகமத்தில் விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அதன்படி தான், கடந்த 2012-ம் ஆண்டு நம்பெருமாள் விக்கிரகத்தில் காணப்பட்ட சிறிய அளவிலான தேய்மானங்கள் சீர் செய்யப்பட்டன. ஆகம விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்த இந்த பணியின் போது, அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள் உடன் இருந்தார்கள்.

மூலவர் ரெங்கநாதர் திருமேனி சுதையினால் ஆனதாகும், இதை ஆண்டுக்கு இருமுறை தைலம் பூசி பாதுகாத்து வருகிறோம். இந்த பெரிய சுதை திருமேனியில் வஸ்திரங்கள், திருவாபரணங்கள் அணிவிக்கும் போது சிறு பழுதுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு பழுது ஏற்பட்டால் அடுத்த கும்பாபிஷேகத்தின் போது அது தகுதியும், அங்கீகாரமும் கொண்ட ஸ்தபதிகள் மூலம் சீரமைக்கப்படும்.

இவ்வாறு தான் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது மூலவர் ரெங்கநாதர் திருமேனியும் சீரமைக்கப்பட்டது. அதில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக கூறுவதும் சரியல்ல. ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் கால நிர்ணயம் கூறமுடியாத அளவுக்கு பழமையானவர். நிரந்தரமான இறைசக்தி உடையவர் என்பதால், திருமேனி சீரமைப்பு பணியின்போது அவருக்கு பாலாலயம் செய்யாமல் அனைத்து பூஜை காலங்களிலும் முறையான பூஜைகள் குறைவின்றி நடந்தன. அந்த திருமேனியில் இருந்த சில சாலக்கிரமங்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக கூறுவதும் ஆதாரமற்றது.

கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியின் தென்மேற்கு மூலையில் உள்ள அறையில் திருவரங்கதமுதனார் திருவுருவச்சிலை உள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கு முற்பட்ட காலத்தில், வெளியிலிருந்து யாரோ கோவில் கொட்டாரம் பகுதியில் வைத்து விட்டு சென்ற புருஷோத்தம பெருமாள் விக்கிரகத்தை அப்போதைய நிர்வாகிகள், பாதுகாப்பு காரணங்களுக்காக, சக்கரத்தாழ்வார் சன்னதி அமுதனார் இருந்த அறையின் ஒரு மூலையில் வைத்திருந்தனர்.

அந்தசிலை கடந்த 2015-ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் கடைசியில் காலியாக இருந்த கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு தற்போது அங்கு முறையாக பூஜைகள் நடந்து வருகின்றன. அந்த சிலையைத்தான் காணவில்லை என ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

கம்பத்தடி ஆஞ்சநேயர் ஒருதூணை ஒட்டியிருந்ததால், அவருக்கு திருமஞ்சனம் செய்வதில் பல நடைமுறை சிரமங்கள் இருந்தன. தவிர பக்தர்கள் அவரை வலம் வந்து வணங்க முடியாத நிலை இருந்தது. எனவே, பக்தர்கள் வசதிக்காக ஆகமவிதி முறைகளுக்குட்பட்டு அருகில் தனி மேடை அமைத்து அந்த ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டு வருகிறார்.

பழமையும், பல்வேறு சிறப்புகளும் கொண்ட புகழ்மிக்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பற்றி சிலர் உள்நோக்கத்தோடு அவதூறு செய்திகளை பரப்புவது கண்டனத்துக்குரியது.வருந்தத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சக அர்ச்சகர்கள், கந்தாடை ராமானுஜமுனி மற்றும் ஸ்தலத்தார்கள், பண்டாரிகள், உள்துறை பணியாளர்கள், கைங்கர்யபரர்கள் உடன் இருந்தனர். 

Next Story