திருமணம் செய்த 10 நாட்களில் காதல் கணவரை சரமாரியாக தாக்கிய இளம்பெண்


திருமணம் செய்த 10 நாட்களில் காதல் கணவரை சரமாரியாக தாக்கிய இளம்பெண்
x
தினத்தந்தி 19 July 2018 10:00 PM GMT (Updated: 19 July 2018 9:28 PM GMT)

காதல் கணவர் தனது கையில் வேறு பெண்ணின் பெயரை பச்சை குத்தி இருந்ததால் ஆத்திரம் அடைந்த இளம்பெண், அவரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார்.

கோவை,

திருமணம் செய்த 10 நாட்களில் நடந்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கோவை சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு புதுமண தம்பதியினர் வந்தனர். இருவரும் சாமி கும்பிட்டுக்கொண்டு இருந்தபோது, திடீரென்று அந்த இளம்பெண் தனது கணவரின், வலது கையில் ஒரு பெண்ணின் பெயர் பச்சை குத்தப்பட்டு இருந்ததை பார்த்தார்.

உடனே அந்த வாலிபர் தனது கையை பெண்ணின் பார்வையில் இருந்து மறைத்தார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண், தனது கணவரின் சட்டையை பிடித்து, தரதரவென கோவிலுக்கு வெளியே இழுத்து வந்தார்.

பின்னர் அவரிடம், கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் யார்? அவருக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்டார். வாலிபர் மழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தனது கணவரை சரமாரியாக தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், அவரிடம் இருந்து தப்பி ஓடினார்.

இருந்தாலும் அந்த இளம்பெண் விரட்டிச்சென்று, சட்டையை பிடித்தும், முடியை பிடித்து இழுத்தும் விடாமல் தாக்கிக்கொண்டே இருந்தார். தப்பி ஓடமுடியாமல் தவித்த அவர், நெஞ்சு வலிக்கிறது என்று கூறி அழுதார். இப்படி எத்தனை பேரிடம் சொல்லி ஏமாற்றினாய்? என்னையும் அதுபோன்று ஏமாற்ற நினைக்கிறாயா? என்று கூறி மீண்டும் தாக்கியதுடன், உனது அம்மாவை அழைத்து வா, அவரிடம் நான் பேச வேண்டும் என்று கூறியபடியே மீண்டும் அடித்து உதைத்தார்.

இந்த சம்பவத்தை பார்த்து கோவிலுக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அவர்களை சமரசம் செய்ய முயற்சி செய்தனர். வேறு சிலரோ தங்களது செல்போன்களில் அந்த காட்சிகளை படம் பிடித்தனர். அப்போது அந்த இளம்பெண் இது எங்களது குடும்ப பிரச்சினை, இதில் யாரும் தலையிட வேண்டாம் என்று எச்சரித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சாய்பாபா காலனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, புதுமண தம்பதியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதில் 25 வயதான வாலிபர் கிணத்துக்கடவை சேர்ந்தவர் என்பதும், 22 வயதான இளம்பெண் பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்பதும், கடந்த 2 ஆண்டாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்ததும், கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் பொது இடத்தில் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்று அவர்கள் இருவரையும் எச்சரித்ததுடன், சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

அந்த வாலிபருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது. முதல் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதை தெரிந்துதான் அந்த இளம்பெண் அவரை காதலித்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து உள்ளனர்.

காதல் திருமணம் செய்து கொண்ட 5 நாட்களுக்குள் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு அந்த இளம்பெண் துடியலூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து விட்டார். பின்னர் அவர் அங்கு தங்கி இருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இதை அறிந்த கணவர், துடியலூர் வந்து தனது காதல் மனைவியிடம், இனிமேல் நான் தகராறு செய்ய மாட்டேன். நாம் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்துவோம், என்னை மன்னித்து விடு என்று கெஞ்சி உள்ளார். இதனைதொடர்ந்து அந்த இளம்பெண் அவருடன் செல்ல சம்மதித்தார். பிறகு அவர்கள் இருவரும் சாய்பாபா கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர்.

அப்போதுதான் அந்த இளம்பெண், தனது காதல் கணவர் கையில் வேறு ஒரு பெண்ணின் பெயர் பச்சை குத்தப்பட்டு இருப்பதை பார்த்ததும் ஆவேசம் அடைந்து பொது இடம் என்றும் பார்க்காமல் கணவரை சரமாரியாக தாக்கி உள்ளார். இது தொடர்பாக புகார் எதுவும் அவர்கள் கொடுக்கவில்லை. தங்களது குடும்ப பிரச்சினையை தாங்களே தீர்த்து கொள்வதாக கூறினர். இதைதொடர்ந்து நாங்கள் அவர்கள் இருவருக்கும் தகுந்த அறிவுரை கூறி அனுப்பி வைத்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பொது இடத்தில் இளம்பெண் தனது கணவரை தாக்கிய வீடியோ மற்றும் புகைப்படம் வாட்ஸ்-அப், முகநூல் உள்பட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story