தெலுங்குதேசம் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு இல்லை


தெலுங்குதேசம் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு இல்லை
x
தினத்தந்தி 19 July 2018 11:15 PM GMT (Updated: 19 July 2018 10:04 PM GMT)

மோடி அரசு மீது தெலுங்குதேசம் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம்,

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியில்லாமல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கூடாது என்று பி.ஆர்.பாண்டியன் கூறியிருக்கிறாரே?

பதில்:- அவருக்கு சட்டத்தைப்பற்றி என்ன தெரியும்? அவர் விவசாய சங்க தலைவர்தான். ஆனால், அரசாங்கத்திற்கு சட்டம் முழுவதும் தெரியும். இதன்படி ஆணையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டு விட்டது. அந்த தகவலின் அடிப்படையில்தான் தண்ணீர் திறக்கப்பட்டது.

கேள்வி:- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது? அதற்கு அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

பதில்:- நம்பிக்கை இல்லா தீர்மானம் நாங்கள் கொண்டு வரவில்லை. ஆந்திர மாநிலத்தின் பிரச்சினைக்காக அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறார்கள். நாம் தமிழ்நாட்டினுடைய பிரச்சினைக்காக அப்போது காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் 22 நாட்கள் அவையே நடக்க முடியாத ஒரு சூழ்நிலையை, அங்கே நமது எம்.பி.க்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது நமக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தார்கள்? யார் முன்வந்தார்கள்? நம்முடைய டெல்டா பாசன விவசாய மக்களுக்காக, நம்முடைய பிரச்சினை தீர்ப்பதற்காக எந்த மாநிலம் முன்வந்தது? எந்த மாநிலமும் முன்வரவில்லை. நம்முடைய எம்.பி.க்கள் தான் தமிழ்நாட்டின் மக்களுக்காக, தமிழ்நாட்டு விவசாய மக்களுக்காக, நம்முடைய உரிமையை பெறுவதற்காக அரசின் சார்பாக, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து நாடாளுமன்ற நிகழ்வே முடங்குகின்ற ஒரு சூழலை ஏற்படுத்தினார்கள். அப்போது யாரும் நமக்கு துணை நிற்கவில்லை. அவரவர் மாநிலங்கள் என்று வரும்போது பிரச்சினையை கிளப்புகிறார்கள். இதன்மூலம் தெலுங்குதேசம் கட்சி கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு இல்லை என்பதை சூசகமாக தெரிவித்து உள்ளார்.

கேள்வி:- எஸ்.பி.கே. நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது பற்றி உங்களது கருத்து?

பதில்:- ஒருவர் தொழில் செய்கிறார் என்றால் அவருக்கு எவ்வளவு வருமானம் வருகிறது? அவர் முறையாக வரி செலுத்துகிறாரா? என்று கண்காணிப்பது வருமான வரித்துறையின் கடமை. அந்த வகையில் தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. எனது சம்பந்தி 35 ஆண்டுகளாக ஒப்பந்ததாரராக இருக்கிறார். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம் மாநிலத்திலும் பல்வேறு பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் கூட பல கோடி ரூபாய்க்கான பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து கொடுத்துள்ளார். தமிழக அரசை பொறுத்தவரையில் முறையாக பதிவு செய்த ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கப்படுகிறது.

தி.மு.க. ஆட்சியில் ஈரோட்டை சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு ரூ.500 கோடிக்கு 10 பணிகள் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. அவர்கள் எப்படி அளித்தார்கள்? அதாவது எதிர்க்கட்சியினருக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வேண்டும். ஸ்டெர்லைட் எடுத்தார்கள், உடனே ராஜினாமா செய்யவேண்டும் என்றார்கள், காவிரி பிரச்சினை வந்தது, சரியாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடவில்லை. இதனால் ராஜினாமா செய்யவேண்டும் என்று சொன்னார்கள். இப்போது இதை எடுத்துக்கொண்டார்கள். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அமைச்சர்களுக்கு தொடர்பு என்று வதந்தி பரப்புகின்றனர்.

எனவே, ஒப்பந்தம் யார் வேண்டுமானாலும் போடலாம். அவர்களுக்கு தகுதி இருக்கிறதா? ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் போட்டு இருக்கிறார்களா? என ஆய்வு செய்து வழங்கப்படும். எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பே கிடையாது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பேசப்படுகிறது.

கேள்வி:- 8 வழிச்சாலைக்காக மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று கோர்ட்டு கூறியிருப்பது பற்றி உங்களது கருத்து என்ன?

பதில்:- யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. கிட்டத்தட்ட 90 சதவீதம் நில அளவு பணி நடைபெற்று முடிந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். 8 வழி பசுமைச்சாலைக்கு தேவையான நிலத்தை, அளவீடு செய்து எல்லைக்கல் போடப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் முன்வந்து, எங்களுக்கு நிலம் எடுப்பதினால் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கின்றார்கள். ஒருசிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, சில நில உரிமையாளர்கள் பல்வேறு கட்சியை சார்ந்தவர்களாக இருப்பதால், அந்த கட்சியை சேர்ந்தவர்களை வைத்து பிரச்சினை உருவாக்க ஒரு கூட்டம் இருக்கிறது. வளர்ச்சி பணிகளை இவர்கள் ஆதரிப்பதே கிடையாது. இந்த அரசை எதிர்க்க வேண்டும், இந்த அரசு கொண்டு வருகின்ற வளர்ச்சிப் பணியை முடக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

எங்களை பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு வளர்ச்சி காணவேண்டும். வளர்ச்சி காண்பதற்கு மத்திய அரசிடமிருந்து எவ்வளவு நிதியை பெற்று நம்முடைய தமிழகம் வளர்ச்சி அடைவதற்கும், தொழில்வளம் பெருகுவதற்கும் அரசால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

பதில்:- அவசரம் இல்லை. அவசரம் என்ற பிரச்சினையே கிடையாது. அந்த நிதியை குறிப்பிட்ட காலத்தில் வாங்கிக் கொள்ளவேண்டும். ஏனென்றால், எல்லா மாநிலங்களும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். 2-வது திட்டமாக இந்த பசுமை வழிச்சாலை திட்டம் இந்தியாவில் வருகிறது. பல்வேறு மாநிலங்கள் எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். மத்திய அரசை நாங்கள் கேட்டவுடன் கொடுத்தார்கள். ஆகவே, அந்த வாய்ப்பை நல்லமுறையிலே பயன்படுத்த வேண்டியது அரசின் கடமை.

தி.மு.க. ஆட்சியில் மத்தியில் டி.ஆர்.பாலு தரைவழி போக்குவரத்துத் துறை மந்திரியாக இருந்தார். அப்போது, தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைக்கு 17 சாலைகள் எடுக்கப்பட்டு, கிட்டத்தட்ட 3,005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கவில்லையா? அந்த சமயம் தமிழகத்தினுடைய வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சம். ஆனால் தற்போது 2 கோடியே 57 லட்சம் வாகனங்கள் உள்ளன. இந்த திட்டம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 5 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலே 14 லட்சம் வாகனங்கள் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே 2.57 கோடி வாகனங்கள் இருக்கிறது. 5 ஆண்டுகள் நிறைவு பெறும் போது, 70 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கும். ஆக மொத்தம், 3.27 கோடிக்கு மேல் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்துவிடும்.

எனவே, அதற்கு சாலை வசதி தேவை. இவர்களுடைய காலத்தில் சாலை போட்டால், மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா? நிலம் எடுத்தால் பாதிக்கப்படமாட்டார்களா? ஆனால், இன்றைக்கு அம்மாவினுடைய அரசு, மத்தியில் இருந்து போராடி, வாதாடி, நிதி உதவி பெற்று இந்த சாலையை அமைக்கின்றது. இந்த சாலையை அமைப்பதின் மூலமாக சேலத்திலிருந்து சென்னை செல்வதற்கு 60 கிலோமீட்டர் குறைவாகிறது. பயண நேரம் குறைகிறது. 60 கிலோ மீட்டருக்கு தேவையான வாகன எரிபொருள் மிச்சமாகிறது. அதுமட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

இந்த சாலை, சேலத்திற்கு மட்டுமல்ல, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை மாவட்ட மக்களுக்கும் பயன்பெறும் வகையில் அமையும். அதேபோல ஈரோடு, திருப்பூர், கேரளா வழியாக வாகனங்கள் செல்கிறது. அனைவரும் சேலத்திற்குத்தான் இந்த சாலை போடுகிறார்கள் என்று தவறான தகவலை சொல்லக்கூடாது. நான் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் இதை முன்வைக்கின்றார்கள். 8 வழிச்சாலை வந்தால் தொழில்வளம் பெருகும். படித்து, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டியது அரசினுடைய கடமை. உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் புதிய, புதிய தொழிற்சாலைகள் வரும். அதற்காகத்தான் இந்தத் திட்டத்தை அரசு கொண்டு வந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story