திருச்செங்கோடு பகுதியில் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு


திருச்செங்கோடு பகுதியில் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 July 2018 10:30 PM GMT (Updated: 20 July 2018 7:11 PM GMT)

திருச்செங்கோடு பகுதியில் பல்வேறு ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு வட்டம் மண்டக்காபாளையத்தில் செயல்பட்டு வரும் உஞ்சனை மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் ரேஷன் கடையினை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பொருட்களின் இருப்பு, விற்பனை, மீத இருப்பு, விற்பனையான பொருட்களின் தொகை விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளவும், காகித பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் அரசினால் வழங்கப்பட்டுள்ள அதிநவீன விற்பனை முனைய கருவியினை (பாயிண்ட் சேல்ஸ் மெசின்) இயக்கி அதன் அடிப்படையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் இருப்பு குறித்து பார்வையிட்டு சரிபார்த்தார். இந்த ஆய்வின்போது விற்பனை செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் விற்பனை குறித்து, விற்பனை முனைய கருவியில் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதா என்றும் சரிபார்த்தார்.

அதனைத்தொடர்ந்து டி.கைலாசம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் டி.கைலாசம்பாளையம் ரேஷன் கடை-1 மற்றும் ரேஷன் கடை-2, கரட்டுபாளையத்தில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ரேஷன் கடை, கொல்லப்பட்டியில் செயல்பட்டு வரும் திருச்செங்கோடு தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ரேஷன் கடை ஆகியவற்றில் பொருட்களின் இருப்பு குறித்து கலெக்டர், மாவட்ட வழங்கல் துறை அலுவலர்களின் துணையுடன் சரிபார்த்தார்.

இந்த ஆய்வுகளின்போது பொதுமக்களிடம் குடிமைப்பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? விற்பனையாளர் சரியாக வருகிறாரா? என்றும் கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும் பொதுவினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களை மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமாகவும், எடையளவு குறையாமலும் முழுமையாக வழங்கிட வேண்டுமெனவும், ரேஷன் கடை மற்றும் சுற்றுப்புறத்தை தற்போது உள்ளது போன்று எப்போதும் தூய்மையாக பராமரிக்குமாறும் கலெக்டர் விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பர்ஹத் பேகம், திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் வேலு உள்பட வழங்கல் துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.

Next Story