குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 1,500 லாரிகள் இயக்கப்படவில்லை


குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 1,500 லாரிகள் இயக்கப்படவில்லை
x
தினத்தந்தி 20 July 2018 10:18 PM GMT (Updated: 20 July 2018 10:18 PM GMT)

வேலை நிறுத்தம் தொடங்கியதையொட்டி வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 1,500 லாரிகள் இயக்கப்படவில்லை.

நாகர்கோவில்,

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டிப்பதோடு அதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டும், மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 20-ந் தேதி (நேற்று) முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவித்திருந்தது.

இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்திருந்தது. மேலும் பல்வேறு லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.

அதன்படி நேற்று முதல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. குமரி மாவட்டத்திலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர். இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு லாரிகளை இயக்கும் லாரி உரிமையாளர்கள் தங்களது லாரிகளை நாகர்கோவில் அனாதை மடம் மைதானம், கோட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள லாரி நிறுத்தங்களிலும், சொந்த இடங்களிலும் நிறுத்தி வைத்திருந்தனர்.

வேலை நிறுத்தத்தால் குமரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அதிகப்படியாக ஏற்றிச் செல்லப்படும் தேங்காய், ரப்பர் ஷீட்கள், ரப்பர் பால், ரப்பர் மரங்கள், தும்பு, உப்பு போன்ற பொருட்கள் தேக்கம் அடைந்தன.

அதே நேரத்தில் உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, பழ வகைகள், மளிகை பொருட்கள், பெட்ரோல்- டீசல் உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகள் வழக்கம் போல் இயங்கின. கேரளாவுக்கும் காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக குமரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மனோகரன் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் எங்கள் சங்கத்துக்கு உட்பட்ட லாரிகள் மொத்தம் 2,750 உள்ளன. அவற்றில் வெளி மாநிலங்களுக்கு 1,500 லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்படக்கூடிய லாரிகளில் 500 லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக குமரி மாவட்டத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச்சென்று திரும்பாத 1,000 லாரிகளில் பெரும்பாலான லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை வந்தடைந்த லாரிகள் குமரி மாவட்டத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கின்றன. இந்த வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் 1,500 லாரிகளும் இயக்கப்படவில்லை.

இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அதிகப்படியாக ஏற்றிச் செல்லப்படும் தேங்காய், ரப்பர்ஷீட், ரப்பர்பால், ரப்பர் மரங்கள், தும்பு, சாமிதோப்பு பகுதியில் உள்ள உப்பளங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் உப்பு போன்ற பொருட்கள் முதல் நாளான நேற்று தேக்கம் அடைந்துள்ளன.

கேரளாவில் லாரி உரிமையாளர்கள் சங்கம் பெருமளவில் இல்லாததால் அங்கு வேலைநிறுத்தம் இல்லை. கேரளாவுக்கு குமரி மாவட்டத்தில் இருந்து தான் 50 சதவீத காய்கறிகள், மளிகை பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. வழக்கம் போல் கேரளாவுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கேரளாவுக்கு பொருட்கள் கொண்டு செல்வதில் எந்த தடையும் இல்லை. இவ்வாறு மனோகரன் கூறினார்.

Next Story