ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 27 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 27 பேர் காயம்
x
தினத்தந்தி 22 July 2018 10:45 PM GMT (Updated: 22 July 2018 7:42 PM GMT)

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 27 பேர் காயமடைந்தனர்.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே காசான்கோட்டையில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மன் கோவில் தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை முட்டி தூக்கி வீசியது. இதில் அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், தா.பழூர், திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் சமயபுரத்தை சேர்ந்த நந்தகுமார் (வயது 34), பெரம்பலூரை சேர்ந்த விஜயன் (35), புதுக்கோட்டையை சேர்ந்த தங்கதுரை (21), மளத்தான் குளத்தை சேர்ந்த ஜெனித் (23) உள்பட 27 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்க நாணயங்கள், பீரோ, கட்டில், சைக்கிள், வேட்டி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை காண அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார் பாளையம், தா.பழூர், திருச்சி, லால்குடி, புள்ளம்பாடி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். உடையார்பாளையம் மற்றும் விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story