மழைநீர் கால்வாய் பாலம் அமைக்கும் பணியால் கழிவுநீர் தேக்கம் பொதுமக்கள் அவதி


மழைநீர் கால்வாய் பாலம் அமைக்கும் பணியால் கழிவுநீர் தேக்கம் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 26 July 2018 10:15 PM GMT (Updated: 26 July 2018 6:53 PM GMT)

தாம்பரம் முடிச்சூர் சாலையில் கண்ணன் அவென்யூ அருகே மழைநீர் கால்வாய் பாலம் அமைக்கும் பணியால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் கழிவுநீர் கலந்து நீர் மாசடைந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் முடிச்சூர் சாலையில் வெள்ள தடுப்பு பணிகளுக்காக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் 2 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் முடிச்சூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாரத்தில் 2 விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைவாக முடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

இந்த பகுதியில் கண்ணன் அவென்யூ அருகே முடிச்சூர் சாலையின் குறுக்கே மழைநீர் கால்வாய் பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிநீர் குழாய் லைன்கள் செல்லும் பகுதியில் பாலம் அமைக்கப்படுவதால் அந்த குழாய் லைன்களை மாற்றி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக நெடுஞ்சாலைத்துறையினர் கூறி வந்தனர்.

இந்த மழைநீர் கால்வாய் பாலம் அமைக்கும் பணியால் அந்த பகுதியில் கழிவுநீர் செல்வது தடைப்பட்டது. இதனால் தாம்பரம் நகராட்சி 32-வது வார்டு மற்றும் பெருங்களத்தூர் பேரூராட்சி 15-வது வார்டு பகுதிகளில் உள்ள கண்ணன் அவென்யூ, ஸ்ரீராம் நகர் உள்பட பல குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இதனால் அந்த பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீருடன் கழிவுநீரும் கலந்து விட்டதால் அந்த நீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். குடிநீர் குழாய்களிலும் கழிவுநீர் கலந்து வருவதால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள காலி நிலங்களில் கழிவுநீர் குளம்போல தேங்கி உள்ளதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி கடுமையான சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மழைநீர் கால்வாய் பாலம் அமைக்கும் பணியை விரைவுப்படுத்தி கழிவுநீர் செல்ல நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பாலம் அமைக்கும் பணி முடியும் வரையில் தற்காலிக ஏற்பாடாக மோட்டார்கள் வைத்து கழிவுநீரை வெளியேற்ற தாம்பரம் நகராட்சி மற்றும் பெருங்களத்தூர் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story