பள்ளத்தில் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்து மேற்பார்வையாளர் பலி


பள்ளத்தில் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்து மேற்பார்வையாளர் பலி
x
தினத்தந்தி 26 July 2018 10:50 PM GMT (Updated: 26 July 2018 10:50 PM GMT)

கல்குவாரியில் பொக்லைன் எந்திரத்தை ஓட்டி பழகியபோது அது பள்ளத்தில் கவிழ்ந்ததில் மேற்பார்வையாளர் பலியானார்.

நெய்க்காரப்பட்டி,


பழனியை அடுத்த மானூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 25). இவர் கொழுமகொண்டான் பகுதியில் உள்ள கல்குவாரியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்தார். இவர் நேற்று அதிகாலை குவாரி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் எந்திரத்தை ஓட்டி பழகுவதற்காக இயக்கினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்தது. இதில் எந்திரத்தின் அடியில் சிக்கிய செந்தில்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதற்கிடையே அங்கு வந்த தொழிலாளர்கள் பள்ளத்தில் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்து கிடப்பதையும், அதன் அடியில் செந்தில் குமார் இறந்து கிடப்பதையும் பார்த்து சாமிநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் எந்திரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். பின்னர் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டி பழகியபோது பள்ளத்தில் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்ததில் மேற்பார்வையாளர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இறந்த செந்தில்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 

Next Story