ஜோலார்பேட்டை அருகே கர்ப்பிணியிடம் 7 பவுன் நகை, செல்போன் திருட்டு


ஜோலார்பேட்டை அருகே கர்ப்பிணியிடம் 7 பவுன் நகை, செல்போன் திருட்டு
x
தினத்தந்தி 28 July 2018 10:15 PM GMT (Updated: 28 July 2018 9:01 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே கர்ப்பிணியிடம் 7 பவுன் நகை, செல்போன் திருட்டு. நெற்றியில் மை தடவி மர்ம நபர் கைவரிசை.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த பெரியமோட்டூரை சேர்ந்தவர் பெருமாள். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (வயது 22). இவர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் சங்கீதா வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, சங்கீதா வீட்டின் வாசலில் நின்றபடி, வீட்டில் யாராவது இருக்கிறீர்களா? என சத்தம் எழுப்பினார். சத்தம் கேட்டு சங்கீதா வெளியே வந்தார். சங்கீதாவிடம் அந்த நபர், கையில் காகிதத்தை கொடுத்து இந்த முகவரி எங்கு உள்ளது? எனக் கேட்டுள்ளார்.

சங்கீதா அந்த காகிதத்தை வாங்கி பார்த்துவிட்டு, எனக்கு தெரியவில்லை என்றார். அதற்குள் அந்த நபர் கையில் வைத்திருந்த மை ஒன்றை சங்கீதாவின் நெற்றியில் தடவினார். சிறிது நேரத்தில் சங்கீதா சுயநினைவை இழந்தார்.

உடனடியாக அந்த நபர் சங்கீதாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி, காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்ட 7 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிக் கொண்டு, அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டார்.

சிறிதுநேரம் கழித்து சுயநினைவுக்கு வந்த சங்கீதாவுக்கு நகை, செல்போன் திருடி சென்ற விவரம் தெரிந்தது. இதையடுத்து அவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூதன முறையில் ஏமாற்றி நகை, செல்போனை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Next Story