ஆவடியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையா? போலீஸ் விசாரணை


ஆவடியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 29 July 2018 10:30 PM GMT (Updated: 29 July 2018 4:52 PM GMT)

ஆவடியில், ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரம் திறந்து கிடந்தது. எனவே மர்மநபர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆவடி,

ஆவடி எச்.வி.எப். சாலையில் பாரத ஸ்டேட் வங்கிகிளை உள்ளது. இந்த வங்கி, பாதுகாப்பு துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் வசதிக்காக தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் அருகேயே அதன் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இங்கு 4 ஏ.டி.எம் எந்திரங்கள் உள்ளன.

இந்த ஏ.டி.எம். மையத்துக்கு காவலாளி கிடையாது. நேற்று காலை அந்த ஏ.டி.எம். மையத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்கச் சென்றார். அப்போது ஒரு ஏ.டி.எம். எந்திரம் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர், போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் அங்கு சென்று பார்த்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாரிகள் யாரும் வங்கியில் இல்லை. போன் மூலம் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் யாராவது ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனரா?. அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதா?. அல்லது அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பியபோது சரியாக பூட்டாமல் சென்றதால் தானாகவே திறந்து கொண்டதா? என அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் இன்று(திங்கட் கிழமை) வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்து பார்த்தபிறகுதான், நடந்தது என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story