நாகர்கோவிலில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தூய்மை ரதம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


நாகர்கோவிலில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தூய்மை ரதம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Aug 2018 10:30 PM GMT (Updated: 1 Aug 2018 3:01 PM GMT)

நாகர்கோவிலில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தூய்மை ரதத்தை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் திறந்த வெளியில் மலங்கழித்தலற்ற சுகாதாரமான மாவட்டமாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையினை தொடர்ந்து தக்க வைத்திடும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மாணவர்கள் மூலமாகவும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மூலமாகவும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையை அளவீடு செய்யும் பொருட்டு தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் –2018 என்ற பெயரில் மத்திய அரசின் ஆய்வுக்குழு, இந்த மாவட்டத்தை ஆகஸ்டு மாதம் 1–ந் தேதியான நேற்று ஆய்வு செய்ய தொடங்கியது. இந்த ஆய்வு வருகிற 31–ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தலைமையில் ஏற்கனவே கூட்டம் நடத்தி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அனைத்து துறை அலுவலர்களும் தூய்மை கணக்கெடுப்பு குழுவிற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட தெரிவிக்கப்பட்டது.

இதையொட்டி தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் – 2018 குறித்து விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தும் வகையில் தூய்மை ரதத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கலந்து கொண்டு விழிப்புணர்வு ரதத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை அரசு வாகனங்களில் ஒட்டினார். மேலும், கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்த உறுதிமொழியினை கல்லூரி மாணவ, மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்த தூய்மை ரதம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல இருக்கிறது.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ராகுல்நாத், உதவி திட்ட அதிகாரி சுப்புலட்சுமி, உதவி திட்ட அலுவலர் பாக்கியசீலன், கல்லூரி மாணவ, மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் பழனியா பிள்ளை விழிப்புணர்வு பாடல்கள் பாடினார், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மேஜிக் நிகழ்ச்சியை அபுபக்கர் தனது மனைவியுடன் பங்கேற்று செய்து காட்டினார்.

தூய்மை கணக்கெடுப்பு தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:–

தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2018–ஐ மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்த மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை, இதனை ஒரு முனைப்பு இயக்கமாக தொடங்கியுள்ளது. மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் கிராமங்களில் தற்போதுள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் தரவரிசை படுத்தப்பட உள்ளது. இதற்கென தனிப்பட்ட கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்றின் மூலமாக ஊரகப்பகுதிகளில் தூய்மை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

கிராமத்தின் பொதுவான தூய்மை நிலை, தூய்மை கணக்கெடுப்பு 2018 பற்றிய விழிப்புணர்வு, ஊரக பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை வசதிகள் இருத்தல், ஊரக பகுதிகளில் திரவக்கழிவு மேலாண்மை வசதிகள் இருத்தல் ஆகியவைகளில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வருகிற அக்டோபர் மாதம் 2–ந் தேதியன்று மத்திய அரசால் விருதுகள் வழங்கப்பட உள்ளது. எனவே, தூய்மை கணக்கெடுப்பு குழுவிற்கு அனைத்து பொதுமக்களும், அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு நமது மாவட்டத்தை தூய்மையான கிராமமாக தக்க வைத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story