நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் யார் என்பதை நிரூபிப்போம் டி.டி.வி. தினகரன் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் யார் என்பதை நிரூபிப்போம் டி.டி.வி. தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 5 Aug 2018 11:15 PM GMT (Updated: 5 Aug 2018 7:27 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் யார் என்பதை நிரூபிப்போம் என்று, மன்னார்குடியில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.ம.மு.க பொருளாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், வக்கீல்கள் பிரிவு செயலாளர் சீனிவாசன், அண்ணா தொழிற்சங்க பேரவை இணைச்செயலாளர் சத்தியமூர்த்தி ,தேர்தல் பிரிவு துணை செயலாளர் மலர்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கூடும் கூட்டத்தை பார்த்து இன்று எதிரிகள் பயந்து கொண்டு இருக்கிறார்கள். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் இந்த திடலில் பேசி உள்ளனர்.

இந்த கூட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் நீதிமன்றத்தை நாடினோம். நீதி கிடைத்தது. அதன்படி இந்த கூட்டம் நடைபெறுகிறது.

1988-ம் ஆண்டு ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நானும், அவருடன் கிராமம், கிராமமாக சுற்றுப்பயணம் சென்றேன். 30 ஆண்டு காலம் ஜெயலலிதாவுக்கு சகோதரியாகவும், தோழியாகவும் இருந்து சசிகலா பணிவிடை செய்தார். தோழியாக இருந்ததால் இன்று பல இன்னல்களை அனுபவித்து பெங்களூரு சிறையில் உள்ளார். இந்த துரோகத்தை வேரறுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சி மலரும்.

முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியை எதிர்த்து தி.மு.க. ஆட்சியை அகற்ற 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். 40 ஆண்டுகளுக்கு பிறகு அதே சரித்திரம் திரும்பி உள்ளது. தற்போது நடைபெறும் ஆட்சி மக்களுக்கு அநீதியை உருவாக்கி உள்ளது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதா கட்டிக்காத்த அந்த இயக்கம் இன்று துரோகிகளிடம் உள்ளது. அதை நாம் மீட்டெடுப்போம்.

தேர்தல் எப்போது வந்தாலும் 200 தொகுதிகளுக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுவது இல்லை. தற்போதைய ஆட்சியில் ரேஷன் பருப்பு ஊழல் என பல ஊழல்கள் நடைபெற்றுள்ளன. டெல்டா பகுதியில் தூர்வாரியதில் ஊழல் நடைபெற்றுள்ளது. ரூ.5 கோடிக்கு கூட வேலைநடைபெறவில்லை.

இதற்கு காரணமான அனைவரும் பதில் சொல்லும் காலம் நெருங்கி விட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. அப்போது சட்டசபையில் எங்்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி.

ஜெயலலிதா ஆட்சி நடைபெறுவதாக கூறுகிறார்கள். அவர் கொண்டுவந்த திட்டங்்களை இன்று பல மாநிலங்கள் செயல்படுத்துகின்றன. ஆனால் ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் 90 சதவீத தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர். அ.தி.மு.க.வில் ஊழல் செய்தவர்கள் குறித்து வருமானவரித்துறை விசாரித்தால் உண்மை வெளிவரும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 41 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். ஆனால் நான் 20 ரூபாய் நோட்டை காட்டி ஓட்டு வாங்கியதாக கூறுகிறார்கள். அதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. நீங்கள் ரூ.10 ஆயிரம் ஓட்டுக்கு கொடுத்தாலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெறும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம். அதை இந்த மாத இறுதிக்குள் எட்டி விடுவோம்.

மத்திய, மாநில அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளை வஞ்சிக்கிறது. காவிரி டெல்டா படுகையை விவசாயம் சார்ந்்த தொழில்கள் தவிர வேறு எந்த தொழில்களையும் செய்ய அனுமதிக்க விடமாட்டோம். எனவே நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. அப்போது நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

விவசாயத்தை அழிக்க பெரியசதித்திட்டம் தீட்டுகிறார்கள். ஜெயலலிதா இருக்கும்வரை அதை தடுத்தார். அதன் பின்னர் ஆட்சியில் இருப்பவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். இதை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மக்கள் இந்த ஆட்சியில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இந்த ஆட்சியை தமிழக மக்கள் விரும்பவில்லை. தமிழக மக்கள் விரும்பாத ஆட்சியை தூக்கி எறிந்து, தலைநிமிர்ந்த தமிழகத்தை உருவாக்க அடிமை ஆட்சியை ஒழிப்போம். நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர உள்ளது. அப்போது நாங்கள் யார் என்பதை நிரூபிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்செல்வன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, விவசாய பிரிவு செயலாளர் துரை.கோவிந்தராஜன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன், நாகை தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரமோகன், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.செந்தமிழன், தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் சரவணசெல்வன், ஒன்றிய செயலாளர்கள் மன்னார்குடி அசோகன்(கிழக்கு), ரெங்கராஜன்(மேற்கு),நீடாமங்கலம் எம்.எஸ்.சங்கர்(வடக்கு), மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் முருகானந்தம், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷேக்அப்துல்காதர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கோசிமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் ஜமால்முகமது, மாவட்ட இளைஞரணி இணைசெயலாளர் தமிழ்வாணன், ஒன்றிய மாணவரணி இணை செயலாளர் அரசு மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story