ஓட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டி போட்டி


ஓட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டி போட்டி
x
தினத்தந்தி 5 Aug 2018 11:20 PM GMT (Updated: 6 Aug 2018 12:46 AM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டு வண்டி போட்டி நடந்தது.

ஓட்டப்பிடாரம், 


ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரியில் எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் ஒன்றிய செயலாளர் குண்டன்பெருமாள் நினைவு நாளை முன்னிட்டு, நேற்று காலையில் மாட்டு வண்டி போட்டி நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆண்டிச்சாமி, பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்து செயலாளர் பெரிய மோகன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் கருப்பசாமி, ஆதிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி என 2 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. பெரிய மாட்டு வண்டி போட்டி 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. இதில் 13 வண்டிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியை முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் தொடங்கி வைத்தார். இதில் ஓசநூத்து தாயம்மாள் வண்டி முதல் இடத்தை பிடித்து ரூ.18 ஆயிரம் பரிசையும், 2-வது இடம் பிடித்த தென்காசி பிரபு வண்டிக்கு ரூ.16 ஆயிரம் பரிசும், 3-வது இடம் பிடித்த வேலாங்குளம் கண்ணன் வண்டிக்கு ரூ.14 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து சிறிய மாட்டு வண்டி போட்டி 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. இதில் 20 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தொடங்கி வைத்தார். இதில் மறுகால்குறிச்சி கபாலி கண்ணன் வண்டி முதலிடம் பிடித்து ரூ.15 ஆயிரம் பரிசை வென்றது. 2-வது பரிசு ரூ.13 ஆயிரத்தை தென்காசி பிரபு வண்டியும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரத்தை மேட்டூர் பச்சைபெருமாள் வண்டியும் பெற்றன. இந்த போட்டியில் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக வந்து போட்டியை கண்டுகளித்தனர். 

Next Story