மேற்கு புறவழிச்சாலை புதிய திட்டத்துக்கு ஆர்ஜிதம் செய்யப்படும் நிலங்களின் விவரம் தெரியாததால் பொதுமக்கள் குழப்பம்


மேற்கு புறவழிச்சாலை புதிய திட்டத்துக்கு ஆர்ஜிதம் செய்யப்படும் நிலங்களின் விவரம் தெரியாததால் பொதுமக்கள் குழப்பம்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:30 PM GMT (Updated: 6 Aug 2018 7:03 PM GMT)

மேற்கு புறவழிச்சாலை புதிய திட்டத்துக்காக ஆர்ஜிதம் செய்யப்படும் நிலங்களின் விவரங்கள் தெரியாததால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கோவை,

சென்னை, திருச்சி, பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் கோவை நகருக்குள் வராமல் மற்ற சாலைகளுக்கு செல்வதற்கு புறவழிச் சாலையான எல் அண்டு டி பைபாஸ் சாலை உள்ளது. உதாரணத்துக்கு சென்னையில் இருந்து ஈரோடு வழியாக வரும் வாகனம் கோவை நகருக்குள் வராமல் கேரளா செல்ல வேண்டுமென்றால் எல் அண்டு டி பைபாஸ் சாலை வழியாக சென்று விடலாம்.

ஆனால் கோவை– சத்தி சாலை, கோவை– மேட்டுப்பாளையம் சாலையில் வரும் வாகனங்கள் சென்னை செல்ல வேண்டுமென்றால் கோவை நகருக்குள் வந்து தான் கோவை– அவினாசி சாலையை அடைய வேண்டும். இதனால் அந்த வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன.

இந்த நெரிசலை போக்குவதற்காக தான் மேற்கு புறவழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் மேற்கு புறவழிச்சாலை செல்லும் பகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததாலும், ஆர்ஜிதம் செய்யப்பட உள்ள நிலத்தை விற்பதற்கோ, வாங்குவதற்கோ தடை செய்யாததாலும் அவற்றை வாங்குபவர்கள் நெருக்கடிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன், மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறிஇருப்பதாவது:–

கடந்த 2010–ம் ஆண்டு 26 கிலோ மீட்டர் நீளத்துக்கு மேற்கு புறவழிச்சாலை 11 கிராமங்கள் வழியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. அதன்படி மேற்கு புறவழிச் சாலை அமைய உள்ள பகுதியில் நிலங்களை விற்கவோ, வாங்கவோ கூடாது என்று தமிழக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகங்களில் அந்த நிலங்கள் பதிவு செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் மேற்கு புறவழிச்சாலை செல்லும் புதிய சாலையை கடந்த 2016–ம் ஆண்டு மார்ச் மாதம் 4–ந் தேதி தமிழக அரசு அறிவித்தது. அதன்படி மதுக்கரை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 33 கிலோ மீட்டர் தூரத்துக்கு 16 கிராமங்கள் வழியாக செல்லும் வகையில் புதிய சாலை உருவாக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை எந்த நிலங்கள் வழியாக மேற்கு புறவழிச்சாலை செல்கிறது என்று அறிவிக்கப்படவில்லை. மேலும் புதிய மேற்கு புறவழிச்சாலை செல்லும் பகுதியில் உள்ள நிலங்களை விற்கவோ, வாங்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் இப்போதும் நிலங்களை விற்பதும், வாங்குவதும் நடக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு புறவழிச்சாலை வழியாக செல்லும் நிலங்களின் உரிமையாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அழைக்கப் பட்டவர்கள் அந்த நிலங்களின் தற்போதைய உரிமையாளர்கள் இல்லை என்றும், அவர்கள் ஏற்கனவே அந்த நிலத்தை விற்றவர்கள் என்றும் தெரியவந்தது. இதே நிலை நீடித்தால் ஆர்ஜிதம் செய்யப்படும் நிலத்துக்கு பழைய நில உரிமையாளர்களுக்கு தான் இழப்பீடு வழங்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மேலும் புதிய மேற்கு புறவழிச்சாலை பகுதியில் உள்ள நிலத்தின் உரிமையாளர் ஒருவர் ரூ.40 லட்சத்துக்கு சமீபத்தில் தான் புதிதாக வீடு கட்டி உள்ளார். ஆனால் மேற்கு புறவழிச்சாலை அந்த வீடு வழியாக செல்வதால் புதிதாக கட்டிய வீட்டை இடிக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதுபோன்று பல கட்டிடங்கள் புதிய மேற்கு புறவழிச்சாலை வழியாக செல்லும் பகுதியில் கட்டப்பட்டு உள்ளதால் அவற்றின் உரிமையாளர்கள் பெரும் மனஉளைச்சலுக்குள்ளாகி உள்ளனர்.

மேற்கு புறவழிச்சாலை பழைய திட்டத்தின்படி அறிவிக்கப்பட்ட பகுதிகளான துடியலூர், வீரகேரளம், வேடப்பட்டி, சித்திரைசாவடி கிழக்கு ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களின் மீதான தடையை நீக்கவில்லை. அதாவது அந்த நிலத்தை வாங்கவோ, விற்கவோ கூடாது என்று அறிவித்த மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை வாபஸ் பெறவில்லை. இதனால் மேற்கு புறவழிச்சாலை செல்லாத பகுதியில் உள்ள நிலங்களை வாங்கவோ, விற்கவோ முடியவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவால் அதை சார்–பதிவாளர் அலுவலகத்தில் அவற்றை பதிவு செய்யவும் முடியவில்லை.

மேற்கு புறவழிச்சாலை புதிய திட்டத்தின்படி தீத்திப்பாளையம், மாதம்பட்டி, மேற்கு சித்திரை சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்கள் மற்றும் வீட்டுமனைகள் எதிர்காலத்தில் அரசால் ஆர்ஜிதம் செய்யப்படும் என்று தெரியாமலேயே பலர் அவற்றை வாங்குகிறார்கள். விற்கிறார்கள். அவற்றை வாங்குபவர்கள் எதிர்காலத்தில் ஏமாற்றம் அடையும் நிலை உருவாகியுள்ளது.

எனவே மேற்கு புறவழிச்சாலை புதிதாக அமைய உள்ள பகுதிகள் எவை என்ற விவரத்தையும், அந்த பகுதியில் உள்ள நிலங்களை வாங்கவோ, விற்கவோ கூடாது என்றும் அதை பதிவு செய்யக்கூடாது என்றும் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்துக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக உத்தரவிட வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் ஏமாற்றத்துக்கு ஆளாவதை தடுக்க முடியும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story