சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 6 Aug 2018 11:00 PM GMT (Updated: 6 Aug 2018 7:04 PM GMT)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் சாந்தாவிடம் மேட்டாங்காடு கிராம மக்கள் மனு அளித்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். இந்நிலையில் பெரம்பலூர் தாலுகா மேட்டாங்காடு கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டர் சாந்தாவை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

அதில், எங்கள் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். கிராமத்தில் யாராவது இறந்து விட்டால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குரும்பலூர் வடக்கு கிராம பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்வோம். தற்போது சுடுகாட்டை சுற்றி உள்ள பகுதிகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இறுதிசடங்கு செய்வதற்கு சுடுகாட்டில் போதுமான இடம் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுடுகாட்டு இடங்களை அளந்து எல்லைகற்கள் நட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் கொடுத்த மனுவில், அரும்பாவூர் பேரூராட்சியில் வசிக்கும் ஒரு தரப்பினரை சேர்ந்த மக்கள் அருகே உள்ள சுடுகாட்டிற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு வசதியாக பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பெருமத்தூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில், குன்னம் தாலுகா பெருமத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் தெரு முதல் பெருமத்தூர் சின்னாறு சாலை வரை இருபுறங்களில் கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் அமைக்கப்பட்ட கால்வாய்களை மண் போட்டு மூடி வருகிறார்கள். இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஒரே தெருவில் தேங்குகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழை பெய்யும் போது அந்த தெருவில் உள்ள பள்ளி மற்றும் வீடுகளுக்கு உள்ளே மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து புகுந்து விடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கட்டப்பட்டுள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தொடர்ந்து கால்வாய்களை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

செவிலியர் உதவியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் சுரேஷ்ராஜா தலைமையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் கொடுத்த மனுவில், நாங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக மாநில அரசு அங்கீகாரம் அல்லாத தனியார் பாராமெடிக்கல் பயிற்சி பள்ளியில் செவிலியர் உதவியாளர் பயிற்சி முடித்து தற்போது வேலை ஏதும் இல்லாமல் இருக்கின்றோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களின் குடும்ப சூழ்நிலையை கருதி ஏதாவது அரசு வேலையை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா ஒதியம் கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள புதுக்காலனியில் அரசுக்கு சொந்தமான இடம் சுகாதாரமற்ற நிலையிலும், கருவேல மரங்களும் நிறைந்து காணப்படுகிறது. எனவே அந்த இடத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக சமுதாயநலக் கூடம் கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

குன்னம் தாலுகா பெரிய வெண்மணி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வரதராஜன் கொடுத்த மனுவில், பெரிய வெண்மணி, கொத்தவாசல் கிராம மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகிக்க பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளேன். எனவே சீரான குடிநீர் வினியோகிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். பெரம்பலூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் இணை செயலாளர் இளங்கோவன் கொடுத்த மனுவில், வேப்பந்தட்டையில் இருந்து இனாம் அகரம், திருவாலந்துரை ஆகிய பகுதிகளுக்கு நகர பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

Next Story