தளி அருகே, தலையில் கல்லை போட்டு தனியார் நிறுவன ஊழியர் கொலை


தளி அருகே, தலையில் கல்லை போட்டு தனியார் நிறுவன ஊழியர் கொலை
x
தினத்தந்தி 6 Aug 2018 11:00 PM GMT (Updated: 6 Aug 2018 7:42 PM GMT)

தளி அருகே தலையில் கல்லை போட்டு தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்தம் சாலை ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் பிராங்கிளின் அருள்தாஸ் (வயது 46). இவர் ஓசூர் அருகே உள்ள ஒரு தனியார் பேட்டரி கம்பெனியில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஹெலன் ஜாஸ்மின் (43). இவர் உனிசெட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

ஹெலன் ஜாஸ்மினின் சகோதரி பேபி கிறிஸ்டியா (46). இவரது கணவர் ரவிக்குமார் (50). இவர்கள் தளி கும்பார தெருவில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பேபி கிறிஸ்டியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை தளி கும்பார தெருவில் உள்ள ரவிக்குமாரின் வீட்டிற்கு பிராங்கிளின் அருள்தாஸ் சென்றார். அந்த நேரம் ரவிக்குமார்-பிராங்கிளின் அருள்தாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் வீட்டின் முன்பு இருந்த பெரிய கல்லை தூக்கி பிராங்கிளின் அருள்தாஸ் தலை மீது போட்டார். இதில் அவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையுண்ட பிராங்கிளின் அருள்தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரவிக்குமாரை கைது செய்து கொலைக்கான காரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட பிராங்கிளின் அருள்தாஸ் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள புதுக்கடை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்த கொலை சம்பவம் தளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story