நாமக்கல் அருகே கோவில்களை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் மனு


நாமக்கல் அருகே கோவில்களை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 6 Aug 2018 10:45 PM GMT (Updated: 6 Aug 2018 8:00 PM GMT)

நாமக்கல் அருகே சாலையூரில் உள்ள அய்யனாரப்பன் மற்றும் கருப்புசாமி கோவில்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள பொட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட சாலையூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோவில்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் சாலையூரில் 3 தலைமுறையாக வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் அய்யனாரப்பன் மற்றும் கருப்புசாமி கோவில்கள் உள்ளன. இது எங்களின் குலதெய்வ கோவில் ஆகும். இங்கு சுமார் 200 குடும்பத்தினர் தலைமுறை, தலைமுறையாக முப்பூஜை வழிபாடு, பவுர்ணமி, அமாவாசை வழிபாடு, கிடா வெட்டுதல் மற்றும் நேர்த்திகடனை செலுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் அய்யனாரப்பன் மற்றும் கருப்புசாமி கோவில்களை அகற்ற சேந்தமங்கலம் தாசில்தார் இரண்டு முறை நோட்டீசு அனுப்பி உள்ளார். இது எங்களின் குலதெய்வ உரிமையை பறிப்பதாக உள்ளது. எனவே தாசில்தார் அனுப்பி உள்ள நோட்டீசை ரத்து செய்து, எங்கள் குலதெய்வ வழிபாட்டு உரிமையை நிலைநிறுத்த வேண்டும். மேலும் நாங்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த நாங்கள் அனுபவித்து வந்த கோவிலை சுற்றி உள்ள சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை கோவிலுக்கு சேர்த்து பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

இதேபோல் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மற்றும் ஒரு நெம்பர் சீட்டு வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

Next Story