கிராம ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 6-வது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க கோரிக்கை


கிராம ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 6-வது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 6 Aug 2018 10:45 PM GMT (Updated: 6 Aug 2018 8:36 PM GMT)

6-வது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்கக்கோரி திருவாரூரில் கிராம ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சாந்தபாலன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் தங்கவேல், மாவட்ட பொருளாளர் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கலந்து கொண்டு பேசினார்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.11 ஆயிரத்து 725 என நிர்ணயம் செய்ய வேண்டும். 6-வது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும். தூய்மை காவலரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியில் இருந்தபோது இறந்த பணியாளர்களுக்கு தமிழக அரசு கருணை தொகை வழங்க வேண்டும்.

வாரிசுதாரருக்கு பணி வழங்க வேண்டும். ஊராட்சி தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன. இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், கவுதமன், பழ வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story