தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி கல்லூரிகளில் மாணவ- மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்


தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி கல்லூரிகளில் மாணவ- மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2018 11:00 PM GMT (Updated: 6 Aug 2018 9:00 PM GMT)

தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி குமரி மாவட்டத்தில் 2 கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறிப்பிட்ட சில துறைகள் தவிர மற்ற துறை தேர்வுகளை தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிகளில் எந்த மொழியை வேண்டுமானாலும் மாணவ- மாணவிகள் தேர்ந்தெடுத்து படித்து தேர்வு எழுதலாம். இந்த நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் தமிழ் பாடம் தவிர பிற அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் கோணத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று கல்லூரி வளாகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 600 மாணவ-மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள்.

இவர்களில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து விட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், மாணவர்களின் கல்வியை பறிக்காதே, மாணவர்களின் கனவை கலைக்காதே, தமிழில் படிக்க விடு என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பினர். அதோடு தங்களது கோரிக்கைகள் எழுதிய அட்டையையும் கையில் வைத்திருந்தனர்.

மாணவ-மாணவிகளின் போராட்டம் காரணமாக கல்லூரி நேற்று பரபரப்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் கீதாராணி மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வெகு நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து போராட்டம் நடந்தது.

இதுபற்றி மாணவர்களிடம் கேட்டபோது, ‘நாங்கள் இக்கல்லூரியில் அனைத்து பாடங்களையும் தமிழ் வழியில் படித்து வருகிறோம். செமஸ்டருக்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில் அனைத்து தேர்வுகளையும் ஆங்கிலத்தில் எழுத சொல்கிறார்கள். தமிழ் வழியில் படித்த எங்களை திடீரென ஆங்கிலத்தில் தேர்வு எழுத சொன்னால் எப்படி முடியும். இதனால் தேர்வில் தோல்வி அடைய வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்‘ என்றனர்.

இதே போல் ஆரல்வாய்மொழியில் உள்ள அறிஞர் அண்ணா கலை கல்லூரியிலும் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கல்லூரி முதல்வரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story