செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் விரிசல்; சென்னை ரெயில்கள் தாமதம்


செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் விரிசல்; சென்னை ரெயில்கள் தாமதம்
x
தினத்தந்தி 6 Aug 2018 9:37 PM GMT (Updated: 6 Aug 2018 9:37 PM GMT)

செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதால், சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மின்சார ரெயில்கள் தாமதமாக வந்தன.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோவில்- காட்டாங்கொளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் நேற்று அதிகாலை 5.40 மணியளவில் திடீரென விரிசல் ஏற்பட்டது.

அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரெயில் சென்றது. தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர், இதுபற்றி செங்கல்பட்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வரும் வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதேபோல செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற் கரைக்கு புறப்படும் மின்சார ரெயில்களும் நிறுத்தப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்தனர். காலை 6 மணிக்கு பிறகு ரெயில் போக்குவரத்து சீரானது.

தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக சேது எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகர், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சுமார் ½ மணி நேரம் தாமதமாக சென்னைக்கு வந்துசேர்ந்தன. இதேபோல் மின்சார ரெயில்களும் தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Next Story