தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 6 Aug 2018 10:53 PM GMT (Updated: 6 Aug 2018 10:53 PM GMT)

தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர், 



திருப்பத்தூர் அருகே புதுகாலனி வெங்களாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40), தொழிலாளி. கடந்த 18.7.2012 அன்று அந்த பகுதியில் நடந்த சவ ஊர்வலத்தில் அதே பகுதியை சேர்ந்த சிங்காரவேலன் (28), அவரது தம்பி முரளி (24) ஆகிய 2 பேரும் நடனமாடினர். அப்போது முருகன் நடனமாடக்கூடாது என்று தெரிவித் துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மறுநாள் வெங்களாபுரத்தில் உள்ள சங்கர் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் முருகன் டீ குடித்து கொண்டு இருக்கும்போது, அங்கு வந்த சிங்காரவேலன், முரளி ஆகிய 2 பேரும் சேர்ந்து முருகனை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்காரவேலன், முரளி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருப்பத்தூர் கூடுதல் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி இந்திராணி, அண்ணன்-தம்பிகளான சிங்காரவேலன், முரளி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

மேலும் பொதுஇடத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரமேஷ் வாதாடினார்.

அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் 2 பேரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story