காங்கேயத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்


காங்கேயத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 6 Aug 2018 11:17 PM GMT (Updated: 6 Aug 2018 11:17 PM GMT)

காங்கேயத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கேயம்,

தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் 1–ந்தேதி முதல் இந்த திட்டத்தின் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை கொடுக்கவேண்டும்.

ஆனால் இந்த திட்டத்துக்காக ஒதுக்கிய நிதி வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், எனவே அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.பி.பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அய்யாவு ஆகியோர் தலைமையில் ஏராளமான தொழிலாளர்கள் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது, தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும். வேலைகொடுக்க மறுத்தால், மீண்டும் வேலை வழங்கும் வரை வேலையில்லாத காலத்துக்கு பாதி சம்பளம் நிவாரணமாக வழங்கவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

மேலும் இதேநிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த கட்டமாக காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறினார்கள். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் பொன்னுசாமி, செல்லமுத்து, சங்க நிர்வாகிகள் சிவக்குமார், செல்வி உள்பட ஏராளமானோர் பெண்கள் கலந்துகொண்டனர்.


Next Story