வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி மோட்டார் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்


வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி மோட்டார் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 7 Aug 2018 10:45 PM GMT (Updated: 7 Aug 2018 6:54 PM GMT)

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி மோட்டார் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

தர்மபுரி,

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி நேற்று மோட்டார் தொழிலாளர்கள் நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் மோட்டார் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரகுபதி தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாநில பேரவை நிர்வாகி கிருஷ்ணன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் நாகராஜ், ஓட்டுனர் பயிற்சியாளர் சங்க மாவட்ட நிர்வாகி சரவணன், இருசக்கர வாகன மெக்கானிக்குகள் சங்க மாவட்ட நிர்வாகி சர்தார், 4 சக்கர வாகன மெக்கானிக்குகள் சங்க நிர்வாகி மனோகரன், ஆட்டோ டிரைவர்கள் சங்க நிர்வாகி ராஜேந்திரன் உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

நாடு முழுவதும் உள்ள 4 கோடி மோட்டார் தொழிலாளர்களையும், பொதுமக்களையும் பாதிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். கடுமையாக அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அவற்றின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை கைவிட வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டம் காரணமாக நேற்று தர்மபுரி மாவட்டத்தில் அதிகமான மெக்கானிக் கடைகள் மூடப்பட்டிருந்தன. அரசு, தனியார் பஸ்கள், பிற வகை வாகனங்கள் வழக்கம் போல் ஓடின. 

Next Story