லஞ்சம் வாங்கி கைதான கோவை மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம்


லஞ்சம் வாங்கி கைதான கோவை மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 8 Aug 2018 12:00 AM GMT (Updated: 7 Aug 2018 9:07 PM GMT)

தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான கோவை மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வணிகவரித்துறை ஆய்வாளர் உள்பட மேலும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை,

கோவை கணபதி உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). இவர் மருத்துவ உபகரணம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க கட்டிடம் கட்டி வருகிறார். அந்த தொழிற்சாலைக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்காக சிவக்குமார், கோவை கு.வடமதுரையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

புதிய மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். அந்த அளவுக்கு பணம் தரமுடியாது என்று கூறியதும், தலா ரூ.20 ஆயிரம் வீதமாவது கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் சிவக்குமார் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசின் ஏற்பாட்டின்பேரில், ரசாயன பொடி தடவிய ரூ.40 ஆயிரத்தை சிவக்குமார் கு.வடமதுரை மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளர் நந்தகோபால், உதவி செயற்பொறியாளர் அய்யாவு ஆகியோரிடம் கொடுத்தபோது அதனை இருவரும் வாங்கினார்கள். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இதை தொடர்ந்து இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2 பேரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

கைதான செயற்பொறியாளர் நந்தகோபால், உதவி செயற்பொறியாளர் அய்யாவு ஆகியோர் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள், மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதன் அடிப்படையில் 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து வழக்கு விசாரணையும் நடைபெறுகிறது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, லஞ்சப்பணத்துடன் கைதான இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், லஞ்சம் கேட்டு வற்புறுத்திய மற்றொரு உதவி செயற்பொறியாளர் தங்கமுத்து, விண்ணப்பத்தை பதிவு செய்ய லஞ்சம் கேட்ட வணிக வரித்துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவர்கள் மீதும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். அரசு துறைகளில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள், ஊழியர்கள் குறித்து பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யலாம் என்று தெரிவித்தனர்.


Next Story