தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு: புதுவையில் இன்று அரசு பொது விடுமுறை 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு


தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு: புதுவையில் இன்று அரசு பொது விடுமுறை 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 12:00 AM GMT (Updated: 7 Aug 2018 10:22 PM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை முன்னிட்டு புதுவையில் இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

 புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தின் மிகப்பெரும் தலைவர் கருணாநிதி. அவர் தனது அரசியல் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை தாங்கி 5 முறை முதல்–அமைச்சராக இருந்தவர். பல பிரதமர்களை உருவாக்கிய மாபெரும் தலைவர் கருணாநிதி தற்போது நம்மிடம் இல்லை. அவரது அரசியல் வாழ்க்கையில், டாக்டர் எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சராக இருந்த போது தி.மு.க. தோல்வி அடைந்தாலும் கருணாநிதி அதனை எதிர்க்கொண்டு மறுபடியும் தமிழகத்தின் முதல்–அமைச்சர் ஆனார்.

டாக்டர் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் பல நல்வாழ்வு திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்தவர்.

முதல்–அமைச்சராக இருந்த அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து சென்றவர். நான் பல முறை அவரை சந்தித்து பேசியிருக்கிறேன். அவருடன் உரையாடிய போது பல நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை ஆட்சிக்கு வழங்கியுள்ளார். பொது வாழ்க்கைக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழர்களின் பாதுகாவலர் என்று பிரகடனப்படுத்தப்பட்டவர். அவரின் மறைவு எங்களுக்கு மன வருத்தம். தமிழ் சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழப்பு. தமிழக மக்களுக்கு வழிகாட்டியாக இருந்த தலைவர் நம்மிடம் தற்போது இல்லை. அவரது வழியில் ஸ்டாலின் பயணிப்பார் என்று நினைக்கிறேன். மறைந்த தலைவர் கருணாநிதியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

கருணாநிதியின் மறைவு முன்னிட்டு புதுவை மாநிலத்தில் நாளை(இன்று புதன்கிழமை) அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளிலும் அரசு பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. புதுவை அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அரசு விழாக்கள் அனைத்தும் 3 நாட்கள் ரத்து செய்யப்படும். கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story