புஞ்சைபுளியம்பட்டி அண்ணா நகரில் மேற்கூரை இடிந்து விழுந்து அங்கன்வாடி பணியாளர் காயம்


புஞ்சைபுளியம்பட்டி அண்ணா நகரில் மேற்கூரை இடிந்து விழுந்து அங்கன்வாடி பணியாளர் காயம்
x
தினத்தந்தி 7 Aug 2018 10:45 PM GMT (Updated: 7 Aug 2018 10:34 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டி அண்ணாநகரில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கன்வாடி பணியாளர் காயம் அடைந்தார். குழந்தைகள் உயிர் தப்பினார்கள்.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அண்ணாநகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கன்வாடி பணியாளராக அதேப்பகுதியை சேர்ந்த ஆரியமாலா (வயது 40) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இங்கு 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கிறார்கள். இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து ஆபத்தாக காணப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று பகல் 11.30 மணி அளவில் அங்கன்வாடியில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளும், பணியாளர் ஆரியமாலாவும் இருந்தனர். அப்போது அங்கன்வாடி மையத்தின் சிமெண்டு மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் அங்கன்வாடி மைய பணியாளர் ஆரியமாலாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

குழந்தைகள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். ஆனாலும் பயத்தில் குழந்தைகள் கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று குழந்தைகளை வெளியே அழைத்து வந்தார் கள். பின்னர் காயம் ஏற்பட்ட ஆரியமாலைவை புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘அண்ணா நகரில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது கட்டிடம் பழுதடைந்து உள்ளே இருக் கும் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆபத்தாக காணப்படுகிறது. மேலும் எந்தநேரத்திலும் கட்டிடம் இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. இதனால் ஒருசில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்பி வைக்க அச்சப்படுகிறார்கள். அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பேராபத்துகள் ஏற்படுவதற்குள் பழுதடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story