மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்


மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2018 11:15 PM GMT (Updated: 7 Aug 2018 10:49 PM GMT)

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறக்கோரியும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருப்பூர் மாவட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

மத்திய அரசு நிறைவேற்ற உள்ள மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவை இயற்றும் முயற்சியை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து சங்கங்கள் நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது. தமிழக மோட்டார் வாகன தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட் டது.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தனியார் பஸ், ஆட்டோ, சரக்கு வேன் உள்பட ஆயிரக்கணக் கான வாகனங்கள் இயக்காமல் நிறுத்தப்பட்டன.

மேலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்குவோர், இரண்டாந்தர கார், வாகன விற்பனையாளர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. இதுபோல், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளும், வாகன உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள் உள்பட மோட்டார் தொடர்புடைய அனைத்து விற்பனையாளர்களும் தங்கள் கடைகளை மூடி வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் வாகன சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குமரன் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு. மோட்டார் வாகன தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அன்பு தலைமை தாங்கினார். இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் செந்தில், பல்லடம் நாகராஜ், கார் ஒர்க்‌ஷாப் மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நலச்சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் அண்ணாமலை, கார் விற்பனையாளர் சங்க பொருளாளர் விக்டர், சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல செயலாளர் செல்லத்துரை, தொ.மு.ச. அரசு போக்குவரத்து சங்க மண்டல செயலாளர் சென்னியப்பன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வாகன அனுமதி, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பணிகளை மாநில அரசிடம் இருந்து பறித்து தனியாரிடம் தாரை வார்க்கும் வகையிலான மோட்டார் வாகன சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை முறைப்படுத்த வேண்டும், வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை மற்றும் சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story