வக்கீல் ஓட்டி வந்த கார் தறிகெட்டு ஓடிய விபத்தில் 2 பேர் சிகிச்சை பலனின்றி சாவு


வக்கீல் ஓட்டி வந்த கார் தறிகெட்டு ஓடிய விபத்தில் 2 பேர் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 7 Aug 2018 11:20 PM GMT (Updated: 7 Aug 2018 11:20 PM GMT)

அடையாறு நோக்கி வேகமாக சென்ற சொகுசு கார் எம்.ஆர்.சி நகர் பஸ் நிலையம் அருகே முன்னால் சென்ற கார் மீது மோதியது. வக்கீல் ஓட்டி வந்த சொகுசு கார் தறிகெட்டு ஓடிய விபத்தில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

அடையாறு,

சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று முன்தினம் மாலை சாந்தோமில் இருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்ற சொகுசு கார் எம்.ஆர்.சி நகர் பஸ் நிலையம் அருகே முன்னால் சென்ற கார் மீது மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் முன்னால் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களையும் இடித்து தள்ளி, ஒரு சரக்கு வாகனத்தையும் இடித்து விட்டு நின்றது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காயம் அடைந்த ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அமீர் ஜஹான் (வயது 35), சைதாப்பேட்டையை சேர்ந்த அபுபக்கர் (32), மயிலாப்பூரை சேர்ந்த அருண் பிரகாஷ் (25), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளையராஜா (39), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (39), கீழ்ப்பாக்கம் கார்டனை சேர்ந்த மார்கரேட் (28) ஆகிய 6 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அடையாறு போக்குவரத்து போலீசார் விபத்தை ஏற்படுத்தியவரை பிடித்து, காரை பறிமுதல் செய்தனர்.

பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் துரைப்பாக்கத்தை சேர்ந்த வக்கீல் பென்ஸ் ரீகன் (37) என தெரியவந்தது, அவரை போலீசார் கைது செய்தனர்.

விபத்தில் காயம் அடைந்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அமீர் ஜஹான், அபுபக்கர் ஆகியோர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இருவரும் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் ஆவர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story