பெண்ணை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: ஆட்டோ டிரைவர் கைது


பெண்ணை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2018 11:30 PM GMT (Updated: 7 Aug 2018 11:30 PM GMT)

பெண்ணை தாக்கி பணம், செல்போனை பறித்து சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த கன்னபாளையம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி தமிழரசி (வயது 30). இவர், ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 3-ந் தேதி இரவு வேலை முடிந்து ஒரு ஆட்டோவில் தனியாக வீட்டுக்கு சென்றபோது, ஆட்டோ டிரைவர் அவரை தாக்கி பணப்பையை பறித்துச் சென்றார். அதில் ரூ.300, செல்போன், ஆதார் அட்டை, ரேஷன்கார்டு ஆகியவை இருந்தது.

இதுகுறித்து ஆவடி போலீசில் தமிழரசி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை ஆவடி அடுத்த பருத்திப்பட்டு சோதனை சாவடி அருகே ஆவடி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். போலீசாரின் கேள்விகளுக்கு ஆட்டோ டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோ டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் ஆவடி கோவர்த்தனகிரி டி.ஆர்.கார்டன் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (43) என்பதும், தமிழரசியை தாக்கி பணப்பையை பறித்து சென்றவர் என்பதும் தெரியவந்தது.

புஷ்பராஜின் சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். கடந்த 1½ ஆண்டுகளாக ஆவடியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் ஆவடி மற்றும் பூந்தமல்லி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 10-ந்தேதி கன்னபாளையம் பகுதியில் நண்பகல் 12 மணிக்கு கடைக்கு சென்று விட்டு நடந்து சென்ற செங்கமலராணி என்ற பெண்ணிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.

புஷ்பராஜ் மீது கும்பகோணம், பாபநாசம், திருவாரூர், ஆகிய இடங்களில் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஆவடி போலீசார் புஷ்பராஜை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story