மிரட்டி ஓரினச்சேர்க்கை பெற்றோரிடம் கூறுவேன் என்றதால் பள்ளி மாணவன் கொலை


மிரட்டி ஓரினச்சேர்க்கை பெற்றோரிடம் கூறுவேன் என்றதால் பள்ளி மாணவன் கொலை
x
தினத்தந்தி 8 Aug 2018 11:00 PM GMT (Updated: 8 Aug 2018 7:54 PM GMT)

மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதை பெற்றோரிடம் கூறுவேன் என்ற பள்ளி மாணவனை கொலை செய்த மினிபஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள விசுவநாதபுரியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் சிரஞ்சீவி (வயது 13). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு சென்ற சிரஞ்சீவி மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நகர் வாய்க்கால் அருகே உள்ள சீத்தைக்காட்டில் ஒரு சிறுவன் பிணமாக கிடப்பதாக அந்த பகுதி மக்கள் க.பரமத்தி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மற்றும் சிரஞ்சீவியின் பெற்றோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்ததில் இறந்து கிடந்தது மாணவன் சிரஞ்சீவி என தெரியவந்தது. அவனது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பின்னர் மாணவன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிரஞ்சீவியை விசுவநாதபுரி சலைவைக்கல் தெருவை சேர்ந்த தனியார் மினிபஸ் கண்டக்டர் பிரதீப் (19) என்பவர் நேற்று முன்தினம் மாலையில் அழைத்து சென்றதாக அப்பகுதியினர் கூறினர். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் பிரதீப்பை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சிரஞ்சீவியை நயவஞ்சமாக பேசி, அங்குள்ள காட்டுப்பகுதிக்கு பிரதீப் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தினார். இதனால் பயந்து போன சிரஞ்சீவி கதறி அழுதான். மேலும் இது பற்றி பெற்றோரிடம் கூறுவேன் என சொல்லியுள்ளான்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப் தனது சட்டையால் அவனது வாய் மற்றும் மூக்கை அழுத்தி பிடித்துள்ளார். இதில் மூச்சு திணறி சிரஞ்சீவி பரிதாபமாக இறந்தான். மேலும் குடிபோதையில் இருந்த பிரதீப் தப்பி ஓடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story