வருவாய், பயணிகள் வருகை குறைவு: மாந்துறை ரெயில் நிலையத்தை மூட முடிவு


வருவாய், பயணிகள் வருகை குறைவு: மாந்துறை ரெயில் நிலையத்தை மூட முடிவு
x
தினத்தந்தி 8 Aug 2018 10:30 PM GMT (Updated: 8 Aug 2018 8:11 PM GMT)

வருவாய் மற்றும் பயணிகள் வருகையின் குறைவு காரணமாக மாந்துறை ரெயில் நிலையத்தை மூட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர்.

திருச்சி,

ரெயில்வேயில் பயணிகள் ரெயில்கள் மட்டும் நின்று செல்லக்கூடிய வகையில் சிறிய ரெயில் நிலையங்கள் பல உள்ளன. இதில் போதுமான வருவாய் இல்லாத ரெயில் நிலையங்களை ரெயில்வே நிர்வாகம் மூடி வருகிறது.

அந்த வகையில் திருச்சி கோட்டத்தில் சிறிய ரெயில் நிலையங்களில் பயணிகள் வருகை மற்றும் வருவாய் எந்த சிறிய ரெயில் நிலையங்களில் குறைவாக இருக்கிறது என்பதை கடந்த சில மாதங்களாக அதிகாரிகள் கணக்கிட்டு வந்தனர். இதில் சில ரெயில் நிலையங்களில் வருவாய் மற்றும் பயணிகள் வருகை மிக குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே தலைமை அதிகாரிகளுக்கு திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கடிதம் எழுதினர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாந்துறை ரெயில் நிலையத்தை மூட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

மாந்துறை ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருக்கிறது. பயணிகள் வருகை இல்லாததால் வருவாயும் குறைந்துள்ளது. இதனால் அந்த ரெயில் நிலையத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளன. மாந்துறை ரெயில் நிலையத்தில் திருச்சி-லால்குடி இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் (வ.எண் 76803/76804), திருச்சி-விருத்தாசலம் பயணிகள் ரெயில் (வ.எண்76846/76845), சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் திருச்சி- லால்குடி பயணிகள் ரெயில் (வ.எண் 76800) ஆகியவை மட்டும் நின்று செல்கிறது.

திருச்சி-லால்குடி பயணிகள் ரெயில் சேவை கடந்த சில நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விருத்தாசலம் பயணிகள் ரெயில் மட்டும் தினமும் நின்று செல்கிறது. அந்த ரெயிலையும் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் மாந்துறை ரெயில் நிலையம் மூடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story