கணவர் மது குடிக்க பணம் கேட்டதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கணவர் மது குடிக்க பணம் கேட்டதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Aug 2018 10:30 PM GMT (Updated: 8 Aug 2018 10:31 PM GMT)

பெரியபாளையம் அருகே மது குடிக்க பணம் கேட்டு கணவன் தொல்லை செய்து வந்ததால் மனம் உடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 49). சமையல்காரர். இவரது மனைவி பத்மாவதி (42). இவர்களுக்கு வெங்கடேசன் என்ற மகனும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். குமார் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். தினந்தோறும் குடிக்க பணம் வேண்டும் என கேட்டு தனது மனைவி பத்மாவதியிடம் தகராறு செய்வார்.

நேற்று மாலை வழக்கம் போல் குடிக்க பணம் கேட்டு பத்மாவதியிடம், குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் மனம் உடைந்த பத்மாவதி, குமார் கடைவீதிக்கு சென்றபோது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் இருந்து வீடு திரும்பிய வெங்கடேசனும், ஜெயலட்சுமியும் தனது தாய் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதனர்.

அழுகை சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பத்மாவதியின் உடலை மீட்டனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார், பத்மாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story