வில்லியனூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


வில்லியனூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 8 Aug 2018 11:00 PM GMT (Updated: 8 Aug 2018 11:00 PM GMT)

வில்லியனூர் அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே ஆரியபாளையம் பகுதியில் துணிகளுக்கு கஞ்சி பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 50–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் கருணாநிதி மறைந்ததையொட்டி தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து தொழிற்சாலையை மூடிவிட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதை பார்த்த தொழிற்சாலை காவலாளி, புதுவையில் உள்ள தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வில்லியனூர், கோரிமேடு, பாகூர், திருபுவனை, சேதராப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து 6 வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள் மற்றும் தயாரித்து வைக்கப்பட்டிருந்த கஞ்சி பவுடர் மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து நடந்த தொழிற்சாலையை வில்லியனூர் தாசில்தார் மேத்யூ பிரான்சிஸ் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்ததற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி வில்லியனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேலையன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story