பெண்ணிடம் நகை பறித்துவிட்டு காரில் தப்பிய கொள்ளையர்கள்


பெண்ணிடம் நகை பறித்துவிட்டு காரில் தப்பிய கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 9 Aug 2018 10:03 PM GMT (Updated: 9 Aug 2018 10:03 PM GMT)

மூதாட்டியிடம் நகையை பறித்த வாலிபர்கள் காரில் தப்பிச்சென்றனர். அவர்களை கிராம மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம், 


ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள கழனிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் மனைவி முனியம்மாள்(வயது 60). இவர் நடந்து சென்று கொண்டிருந்த போது காரில் வந்த 3 வாலிபர்கள் முனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

அதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்ட பி.கொடிக்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் டிராக்டரை சாலையின் குறுக்கே நிறுத்தி காரை வழிமறித்து அதில் இருந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்கள் நயினார்கோவில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் காச்சானி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (36), மற்றும் சென்னையை சேர்ந்த செல்வக்குமார் (24), தினேஷ்குமார்(23) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வந்த காரில் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன.

இவர்களுக்கு நயினார் கோவில் பகுதியில் காச்சானி, கரைமேல் குடியிருப்பு, அகரம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்த போலீசார், காரையும், அதில் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் காரில் நம்பர் பிளேட் இல்லாமலும், வக்கீலின் கார் என்பதற்கான அடையாளம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story